இந்தியாவின் 42 சதவீதம் பகுதிகளில் அசாதாரணமான வறட்சி.. அதிர வைக்கும் புள்ளிவிவரங்கள்
டெல்லி: வறட்சி முன்னெச்சரிக்கை அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் 42 சதவீதம் பகுதியில் அசாதாரணமான அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 6 சதவீதம் அளவுக்கு அதிகமாகவே வறட்சி நிலவுகிறது.
தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டு பொய்த்து போனதால், மிககடுமையான வறட்சியை இந்த ஆண்டு இந்தியா எதிர்கொண்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையம் கடந்த மே 30ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், நாட்டில் உள்ள 91 மிகப் பெரிய நீர் தேக்கங்களில் 20சதவீதம் அளவுக்கே தண்ணீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இப்போது உள்ள சூழ்நிலையை ஒப்பிடும் போது கடந்த ஆண்டு ஒரளவு நீர் இருப்பு நன்றாக இருந்தது என்றும் கூறியுள்ளது.
இதனால் வறட்சியை சமாளிக்க இப்போது அனைவரின் எதிர்பார்ப்பும் தென்மேற்கு பருவ மழை மீது தான் உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு சராசரி அளவாக இருக்கும் என கூறியுள்ளது.
அஸ்ஸாமில் நீடிக்கும் விமான மர்மங்களைப் போல 'பறவைகளின் தற்கொலை பிரதேசமும்/' புரியாத புதிர்தான்!
இயல்பான மழை
வடமேற்கு இந்தியா (94 சதவீதம்) மற்றும் வடகிழக்கு இந்தியாவில் (97 சதவீதம்) உள்ள மாநிலங்களில் இயல்பை விட குறைவான அளவு மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மத்திய இந்தியாவில் 100 சதவீதம் அளவுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பிற இதரப்பகுதிகளில் 97 சதவீதம் அளவுக்கு தென்மேற்கு பருவ மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
42 சதவீதம் இந்தியா
இதனிடையே வறட்சி முன்னெச்சரிக்கை அமைப்பு மே 28ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தியாவில் 42 சதவீதம் பகுதிகளில் அசாதாரணமான அளவுக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 6 சதவீதம் அதிகம் ஆகும். அசாதாரணமான அளவு வறட்சி பாதிப்பு என்பது ஏப்ரல் இறுதியில் 42.16 சதவீதப் பகுதியாக இருந்தது. இப்போது மே மாத இறுதியில் 42.61 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
வறட்சி அதிகரிப்பு
கடந்த 2018ம் ஆண்டு மே 28ம் தேதி 36.74 சதவீதம் பகுதிகளில் அசாதாரணமான வறட்சி இருந்தது. அது இந்த ஆண்டு மே 28ம் தேதி 42.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இன்னும் 0.68 சதவீதம் அளவுக்கு உயரும் என கூறப்படுகிறது. எனவே 6 சதவீதம் அளவுக்கு வறட்சி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
வறண்ட மாநிலங்கள்
தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மிகமோசமான அளவுக்கு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன" இவ்வாறு கூறியுள்ளது.