உ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர் பரிதாப பலி
டெல்லி: உத்தரப்பிரதேசம், பீகாரில் மீண்டும் இடி மின்னல் தாக்கியதில் 43 பேர் பரிதாபமாக பலியாகினர்.
நாடு முழுவதும் பருவமழை காலம் ஒருபுறம் தீவிரமாக இருக்கிறது.. இன்னொரு பக்கம் இன்னமும் அனலின் தாக்கம் குறைந்ததாகவும் இல்லை.
மகாராஷ்டிராவில் கனமழை கொட்டியதால் பல இடங்கள் வெள்ளத்தால் மிதந்தன. கனமழையால் சுவர்கள் இடிந்து விழுந்தன. மும்பையில் சனிக்கிழமையன்றும் கனமழை கொட்டியது.
மின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது?
அதிகமான வெப்பநிலை
அதேநேரத்தில் பஞ்சாப், ஹரியானாவில் வழக்கத்தைவிட கூடுதல் வெப்ப நிலை பதிவாகி இருந்தது. டெல்லியில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இருப்பினும் டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேக மூட்டமாகவும் லேசாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உ.பி.யில் இடிமின்னல்- 23 பேர் பலி
உத்தரப்பிரதேசத்தில் கனமழை கொட்டியது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இடி, மின்னல் மழைக்கு 23 பேர் பரிதாபமாக பலியாகினர். 29 பேர் படுகாயமடைந்தனர். அதிகபட்சமாக அலகாபாத்தில் 8 பேர் மரணமடைந்திருக்கின்றனர். இதேபோல் பீகாரில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
பீகாரில் இடிதாக்கி 20 பேர் மரணம்
பீகாரில் இடி, மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்தனர். பீகாரின் போஜ்பூரில்தான் அதிகபட்சமாக 9 பேர் பலியாகி உள்ளனர். பாட்னாவில் 2 பேர் மரணம் அடைந்திருக்கின்றனர். மொத்தமாக சனிக்கிழமையன்று பீகார், உ.பி.யில் இடி மின்னல்தாக்கி மொத்தம் 43 பேர் பலியாகினர்.
வட இந்தியாவுக்கு எச்சரிக்கை
தற்போதைய பருவமழை காலத்தில் பீகார், உத்தரப்பிரதேசத்தில் இடிமின்னல் தாக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.