தூக்க கலக்கம்.. துடிதுடித்த 43 பேரின் உயிர்.. விடிகாலையில் நடந்தது என்ன.. டெல்லி தீ விபத்தின் பகீர்!
டெல்லி: 30 தீயணைப்பு வண்டிகள் வந்தும், 43 பேரின் உயிரை காப்பாற்ற முடியாத சோகம் நாட்டு மக்களை பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது.. தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இவ்வளவு பெரிய தீ விபத்து ஏற்பட என்ன காரணம்?
தீ விபத்து நடந்த பகுதி ஒதுக்குபுறமான இடம் கிடையாது.. ராணி ஜான்சி சாலையில் உள்ள ஆனஜ் மண்டி என்ற இடம்.. மிகபெரிய கமர்ஷியல் இடம் இது.. எப்பவுமே கூட்ட நெரிசல் நெருக்கி தள்ளி இடம்தான் இந்த பகுதி!
இந்த இடத்தில், பைகள் தயாரிக்கும் ஒரு ஃபேக்டரியில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஃபேக்டரியில் வேலை முடிந்ததும் ஊழியர்கள் கிளம்பிவிடுவார்கள் என்றாலும் பல ஊழியர்கள், அங்கேயே படுத்து தூங்குவதும் இயல்பு. இதில், சுமார் 100 ஒப்பந்த தொழிலாளர்களும் அடக்கம்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேண்டும்.. உன்னாவ் பெண்ணின் சகோதரி
மின்கசிவு
அப்படித்தான் இவர்கள் இன்றும் தூங்கி கொண்டிருந்தனர்.. திடீரென்று விடிகாலை 5.20 மணிக்கு மின்கசிவு ஏற்பட்டுள்ளது.. இதனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.. சுற்றிலும் தீ பற்றி எரிவதை பார்த்ததும், தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து எழுந்துள்ளனர்.
அலறினர்
தூக்கத்தில் இருந்து எழுந்ததால், முதலில் அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை.. என்ன செய்வது என்றும் தெரியவில்லை.. எந்த பக்கம் ஓடுவது என்று தெரியாமல் தவித்தபடியே உள்ளுக்குள் அலறி உள்ளனர். அது பை தயாரிக்கும் ஃபேக்டரி என்பதாலும், இடமும் ரொம்ப நெரிசலானது என்பதாலும் தீ வேகமாக பற்றி கொண்டே எரிந்தது.
அட்டை பெட்டிகள்
அதாவது 600 சதுர அடி குறுகிய இடத்தில் இந்த தீ பற்றி இருக்கிறது.. ஸ்கூல் பைகள், பாட்டில்கள், அட்டை பெட்டிகள் போன்றவை வைக்கப்பட்டிருந்தன. இதில், அதிகளவில் பேப்பர்கள், அட்டைப் பெட்டிகளில்தான் அடுத்தடுத்து தீ மளமளவென பற்றி எரிந்துள்ளது.
பெருத்த சோகம்
தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்ததும், 30 தீயணைப்பு வண்டிகளுடன் வந்துவிட்டனர். ஆனால் 30 வண்டிகள் இருந்தும், 43 பேரின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது பெருத்த சோகம்தான்.. இவர்கள் எல்லாருமே இந்த ஃபேக்டரி தொழிலாளர்கள்.. இந்த தீயில் வந்த புகைதான் நிறைய பேரது சுவாசத்தை நிறுத்தி உள்ளது. 50க்கும் மேற்பட்டோரை மட்டுமே, தீயணைப்புத்துறையினரால் பெரும் போராட்டத்துக்கு பிறகு மீட்க முடிந்தது.
மீட்பு பணிகள்
மேலும் 21 பேருக்கு மேல் பலமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எல்லாருமே டெல்லி ராம் மனோகர் லோகியா, ஹிந்து ராவ் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடிகாலையில் இருந்து இன்னமும் மீட்பு பணி நடந்து வருகிறது.. இடுபாடுகளில் எவரேனும் சிக்கி உள்ளனரா என்ற பீதியும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த தீ புகையின் காரணமாக நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார்கள் போலீசார். மேலும் விபத்து நடந்தது குறுகிய பகுதி என்பதால் மீட்பு நடவடிக்கையும் இவர்களுக்கு சிக்கலாகவே இருந்து வருகிறது.
இரங்கல்
ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த தீ விபத்து அதிர வைத்துள்ளது.. தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.. தீ விபத்து ஏற்பட்ட தகவலை கேட்டதுமே, உள்ளூர் மக்கள் அந்த பகுதியில் குவிந்துவிட்டனர்.. தொழிலாளர்களின் உறவினர்கள் பதறியடித்து கொண்டு ஓடி வந்தபடியே உள்ளனர்.. ஏற்கனவே நெரிசல் பகுதி என்பதால், இப்போது மேலும் நெரிசல் அதிகமானது.. அதனால் காலையிலேயே இந்த பகுதியின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
மக்கள் அதிர்ச்சி
தீ விபத்து பகுதியில் போதுமான ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் கூறப்படுகிறது.. ஏனெனில், தீக்காயம் அடைந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் தங்களில் தோளிலேயே சுமந்து கொண்டு ஆட்டோவிலும், பிற வாகனங்களிலும் ஏற்றினர்.. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி மேலும் அதிர்ச்சியை தந்து வருகிறது.