கொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி சலுகை இந்த ஆண்டு வரை நீடிப்பு.. ஜிஎஸ்டி கவுன்சில்
லக்னோ: கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகைகளை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட போது 12 -க்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசுகளின் வரிகள் ஒன்றிணைக்கப்பட்டன. ஆனால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியன ஜிஎஸ்டிக்கு கொண்டு வரப்படாமல் விலக்கு அளிக்கப்பட்டன.
மத்திய மாநில அரசுகளின் வருவாயை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த விலக்கு அளிக்கப்பட்டதால் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு உற்பத்தி வரியை உயர்த்தி வருகிறது. மாநில அரசுகள் வாட் வரியை விதித்து வருகிறது. வரி வீதம் குறையாததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கி தேவை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் விலை உயர்ந்து காணப்பட்ட பெட்ரோல் டீசலின் விலை மேலும் உயர்ந்து ரூ 100 ஐ கடந்தது.
இதனால் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரும் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. இந்த நிலையில் இன்றைய தினம் லக்னோவில் 45 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் 20 மாதங்கள் கழித்து மாநில நிதியமைச்சர்கள் நேரடியாக பங்கேற்றார்கள்.
கொரோனா தொற்றின் நிலையை கருத்தில் கொண்டு அதற்கான சிகிச்சை அளிக்கும் 4 மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆம்போடெரிசின் பி , டோசிலிஜூமாப், ரெம்டிசிவிர், ரத்த உறையாமையை தடுக்கும் ஹெபரீன் ஆகிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் ஆம்போடெரிசின் பி , டோசிலிஜூமாப் ஆகிய மருந்துகளுக்கு5 சதவீதம் ஜிஎஸ்டி விதித்திருந்த நிலையில் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அது போல் மற்ற இரு மருந்துகள் ரெம்டிசிவிர், ஹெபரீன் ஆகிய மருந்துகளின் ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இந்த 4 மருந்துகளுக்கான ஜிஎஸ்டி சலுகை இந்த மாதம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே மேற்கண்ட மருந்துகளுக்கான ஜிஎஸ்டி விலை குறைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அது போல் மேற்கண்ட 4 மருந்துகளுடன் சேர்த்து இடோலிஜுமாப், போசாகோனாசோல், இன்பிலிக்மாப், பாம்லானிவிமாப் மற்றும் எடேசேவிமாப், காசிரிவிமாப் மற்றும் இம்டேபிமாப், 2 டீஆக்ஸி டி குளுகோஸ் மற்றும் ஃபேவிபிரவீர் ஆகிய மருந்துகளுக்கான ஜிஎஸ்டி விலை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.