விஜய் திவஸ் டிசம்பர் 16: இந்திய ராணுவத்தின் வரலாற்று பெருமை வாய்ந்த வங்கதேச விடுதலை போர்!
டெல்லி: மதத்தால் ஒரு நாடு உருவாகலாம்.. ஆனால் அந்த நாட்டின் ஒவ்வொரு தேசிய இனமும் தங்களது மொழி, பண்பாட்டு அடையாளங்கள் புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்படும்போது கிளர்ந்தெழுந்து தனி தேசமாக முகிழ்ந்திருப்பதை வரலாற்றின் பக்கங்கள் நெடுகிலும் காண முடியும்.
இந்தியாவும் 1947-ல் மத அடிப்படையில் துண்டாடப்பட்டது. முஸ்லிம்களுக்கான ஒரு தனி நாடாக பாகிஸ்தான் உருவானது. இந்தியாவோ இந்துக்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மத மக்களுக்கான தாய்வீடாக, மதச்சார்பின்மை தேசமாக திகழ்ந்தது.
இந்தியாவின் மேற்கே பாகிஸ்தானும் கிழக்கே பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியாக கிழக்கு பாகிஸ்தானும் இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் விடுதலை காலம் தொடக்கம் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தங்களது வங்க மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என போராட்டங்கள் நடத்தினர்.
வங்க மொழிப் போர்
தங்களது வங்க மொழி உரிமைக்கான கிழக்கு பாகிஸ்தான் மாணவர்களும் இளைஞர்களும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தினர். ஆனால் பாகிஸ்தான் அரசு கண்டுகொள்வதாக இல்லை. அத்துடன் கிழக்கு பாகிஸ்தானின் வருவாயில் தம்மை மட்டுமே வளப்படுத்திக் கொண்டது இன்றைய பாகிஸ்தானாகிய அன்றைய மேற்கு பாகிஸ்தான்.
வங்கதேச கிளர்ச்சி
மொழி வழி ஒடுக்குதல், பொருளாதார ரீதியாக புறக்கணிப்பு இவற்றின் காரணமாக மிகப் பெரும் கொந்தளிப்பு கிழக்கு பாகிஸ்தானில் பிரவாகமெடுத்தது. அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியில் இருந்தது. ராணுவ அதிபர் அயூப்கானுக்கு எதிரான கிளர்ச்சி உச்சகட்டத்தை எட்டியது. அவர் பதவி விலக நேர்ந்ததால் யாஹ்யா கான் பதவிக்கு வந்தார்.
சுயநிர்ணய உரிமை முழக்கம்
அப்போது கிழக்கு வங்கத்தின் பெருமகனார் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் வங்க மொழி பேசும் மக்களுக்கான சுயநிர்ண உரிமை குரல் எழுந்தது. கிழக்கு பாகிஸ்தானுக்கு தனி ராணுவம், தனி நாணயம், தனி வெளியுறவு என ஐநா அங்கீகரித்த சுயநிர்ணய உரிமை முழக்கத்தை 1960களின் மத்தியில் முன்னெடுத்தார் முஜிபுர் ரஹ்மான். ஒட்டுமொத்த கிழக்கு பாகிஸ்தானும் முஜிபுர் ரஹ்மான் பின்னாள் அணி திரண்டனது.
பெருவெற்றி
அப்போது மேற்கு பாகிஸ்தானை ஆட்சி செய்து வந்தர் பூட்டோ. அப்போதைய தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை முஜிபுர் ரஹ்மான் பெற்றார். மொத்தம் உள்ள 162 இடங்களில் 161 இடங்களை முஜிபுர் ரஹ்மான் கட்சி கைப்பற்றியது. தங்களது சுயநிர்ணய உரிமைப் போருக்கான பொதுவாக்கெடுப்பாக கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கருதினர்.
வங்கதேச தனிநாடு கோரிக்கை
ஆனால் மேற்கு பாகிஸ்தானின் பூட்டோ மக்கள் கட்சி செல்வாக்கு இழந்த நிலையில் கிழக்கு பாகிஸ்தான் மக்களை ஒடுக்குவதற்கு ராணுவத்தை அனுப்பினார். கிழக்கு பாகிஸ்தானில் ராணுவ அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. சொந்த தேசத்தின் மக்கள் என்றும் பார்க்காமல் காக்கை குருவிகளாக சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதனால் வங்கதேசம் என்கிற தனிநாடு கோரிக்கையை கிழக்கு பாகிஸ்தானிய மக்கள் முழக்கமாக முன்வைத்தனர்.
முஜிபுர் ரஹ்மான் கைது
இத்தனைக்கும் முஜிபுர் ரஹ்மான், சுயநிர்ணய உரிமை கொள்கையில்தான் உரிமையாக இருந்தார். ஆனால் பாகிஸ்தானின் அரச பயங்கரவாதம் அவரையும் வேட்டையாடியது. அப்போது நமது நாட்டின் ஆளும் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் இருந்தது. இதனால் கிழக்கு பாகிஸ்தான் விவகாரத்தில் ராணுவ தலையீடு குறித்து முதலில் அனைத்து தரப்பிலும் ஒருவித தயக்கம் இருந்தது.
இனப்படுகொலை
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, கிழக்கு பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்புங்கள் என அப்போதைய தளபதி மானெக்ஷாவுக்கு கட்டளையிட்டார். அப்போது பல லட்சம் மக்கள் குறிப்பாக இந்துக்கள் குறிவைத்து கிழக்கு பாகிஸ்தானில் இனப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர். உலகையே இந்த இனப்படுகொலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிறகென்ன இந்திய ராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. இந்தியாவும் அப்போதைய சோவியத் யூனியனும் வங்கதேச விடுதலை ராணுவமான முக்தி பாகினிக்கு பக்க பலமாக நின்றன. அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுடன் கை கோர்த்தன. பல லட்சம் மக்களைப் பலி கொண்ட இந்த வங்கதேச யுத்தம் முடிவுக்கு வந்த டிசம்பர் 16-.
வங்கதேசம் எனும் புதிய தேசம்
ஆம்... இந்தியாவின் ராணுவ தலையீட்டில் பூமிப்பந்தில் வங்கதேசம்- பங்களாதேஷ் என்கிற புதிய தேசம் 1971-ம் ஆண்டு பிறந்தது. பாகிஸ்தானின் 8.000 ராணுவ வீரர்கள் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டனர். சுமார் 90,000 பேர் போர் கைதிகளாகவே சரணடைந்தனர்.
வாஜ்பாய் சொன்னது..
வங்கதேச யுத்தத்தில் வென்று புதிய தேசத்தை உருவாக்கிவிட்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த பிரதமர் இந்திரா காந்தியை வாழ்த்த அப்போதைய ஜனசங்கத்தின் முதுபெரும் தலைவர் வாஜ்பாய் பயன்படுத்தியது.. துர்காதேவியாக உங்களை பார்க்கிறேன் என்றார். உரிமை மறுக்கப்படும் மக்களின் போராட்டங்கள் ஒடுக்கப்படலாம்.. மவுனிக்கப்பட்டும் போகலாம்.. ஆனால் நியாயங்கள் ஒருநாளேனும் வெல்லாமல் போகாது என்பதை நிரூபித்த நாள் டிசம்பர் 16!