நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்
டெல்லி: நாடு முழுவதும் கடுமையாக மாசுப்பட்டுள்ள 34 ஆறுகளை தூய்மைப்படுத்த, மத்திய அரசு சுமார் ரூ.5,870 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மொத்தம் ரூ5,870 கோடியில், ரூ2,522 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் நதிகளின் மாசுநிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
நாடு முழுவதும் ஓடும் நதிகளில் 351 பகுதிகள் மாசு அடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்கை நதியைத் தவிர்த்து நாடு முழுவதும் 16 மாநிலங்களில் 34 ஆறுகளில் நிலவும் மாசுபாட்டை குறைக்க நிதி ஒதுக்கி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார். அதில் மத்திய அரசுக்கு பல்வேறு மாநிலங்களிடமிருந்து மாசு சுத்தப்படுத்துதல் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.
இதில் மாசுபட்ட ஆறுகளை தூய்மைப்படுத்தும் பணியும் அடங்கும். இதனையடுத்து மாநிலங்களின் கோரிக்கை தொடர்பாக தேசிய நதி பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் முடிவில் 16 மாநிலங்களில் 77 நகரங்களில் ஓடும் 34 ஆறுகளை தூய்மைப்படுத்த ரூ.5870.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் தேசிய நதி பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், 9 மாநிலங்களுக்கு ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு ரூ.143 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு கேள்விக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஏரிகள் மற்றும் ஈரநிலங்களில் மாசு குறைப்புக்காக 20 மாநிலங்களுக்கு ரூ.1,181 கோடியை வெளியிட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.58 கோடி ரூபாய் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.