ஆல் இந்திய ரேடியோ.. திருவனந்தபுரம் வானொலி நிலையம்.. காசு இல்லப்பா கடையை மூடு!
டெல்லி:மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய வானொலியின் 5 மண்டல சேவைகளை மூட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான அறிவிப்பாணையை பொது சேவை ஒளிபரப்பாளரான பிரசார் பாரதி வெளியிட்டுள்ளது.
பேரிடர் காலங்களிலும் பல அவசர நிலை காலங்களிலும் ரேடியோ மூலமாக தான் பொது மக்களை அரசு தொடர்பு கொண்டு வந்தது. அரசின் திட்டங்கள், செய்திகள், புயல் அல்லது வானிலை பற்றிய எச்சரிக்கை முன் அறிவிப்புகள் என அவற்றை குறிப்பிடலாம்.
ஒரு காலத்தில் தகவல் தொடர்பின் முக்கிய அம்சமாக விளங்கிய ரேடியோவை வீட்டில் வைத்திருப்பவர்களுக்கு ஊரில் மதிப்பு இருந்தது. பின்னர், படிப்படியாக பெரும்பாலான வீடுகளில் இடம்பிடித்த ரேடியோ, அன்றாட வெகுஜன மக்கள் பயன்படுத்தும் சாதனமாக மாறியது.
தகவல் தொடர்பின் வளர்ச்சி
அதனை தொடர்ந்து, பரவலாக தகவல் தொடர்பு வளர்ந்து உச்சம் பெற்றாலும், ரேடியோவின் பயன்பாடு இருக்கத்தான் செய்தது. ஒரு காலத்தில் ராபின் ஹீட்டாக காட்டப்படும் ஹீரோவை பிடிக்க, போலீசார் வெளியிடும் அறிவிப்பு, ரேடியோவில் ஒலிப்பரப்பப்படும் காட்சிகளும் திரையில் தோன்றின.
ரேடியோவை அறியாத தலைமுறை
இன்றைய தலைமுறைக்கு எது செல்போனை பற்றி தெரிந்த அளவு ரேடியோ பற்றி தெரியாது. அந்தளவுக்கு தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. அது ஒருபுறமிருக்க. பிரதமர் மோடி கூட, அகில இந்திய வானொலியின் வீச்சை பயன்படுத்தி மாதம் ஒரு முறை ‘மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
வானொலி நிலையங்கள் மூடல்
இந் நிலையில், இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய வானொலியின் ஐந்து மண்டல சேவைகளை மூட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான அறிவிப்பாணையை இந்திய பொது சேவை ஒளிபரப்பாளரான பிரசார் பாரதி வெளியிட்டுள்ளது.
அறிவிப்பாணை வெளியீடு
இது தொடர்பாக பிரசார் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அகில இந்திய வானொலி சேவையை இன்னும் முன்னேற்றவும், நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கிலும் அகமதாபாத், ஐதராபாத், லக்னோ, திருவனந்தபுரம் மற்றும் ஷில்லாங்கில் இயங்கி வரும் அகில இந்திய வானொலி மண்டல சேவைகளை உடனடியாக மூட உத்தரவிடப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
5 நகரங்களில் இல்லை
இதனை தொடர்ந்து, பல ஆண்டுகளாக ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினராக காட்சியத்த ரேடியோ சேவை, மேலும் பல நகரங்களிலும் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் திருவனந்தபுரம், லக்னோ உள்ளிட்ட 5 நகரங்களில் இனி ரேடியோ சேவை இருக்கப்போவதில்லை என்பது தான் உண்மை.