5 மாநில தேர்தல் முடிஞ்சாச்சு.. அடுத்து கூடுகிறது நாடாளுமன்றம்.. அகஸ்டா கவலையில் காங்.!
டெல்லி: ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பெரிதும் எதிரொலிக்காத அகஸ்டா வெஸ்ட் லேண்ட் விவகாரம், வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரிதும் புயலை கிளப்பும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சி மீதான கோபம், வசுந்தரா ராஜே மீதான அதிருப்தி உள்ளிட்ட காரணிகள் வெற்றியை தம் பக்கம் கொண்டு வந்து சேர்க்கும் என்று காங்கிரஸ் திடமாக நம்புகிறது.
அதே நேரத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னதாக இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டு, டெல்லி நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ கஸ்டடியில் உள்ளார். 5 நாள் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் அனுப்பிய நிலையில் தேர்தலில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் விவகாரம் பாஜகவுக்கு எதிர் பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறினர்.
தேர்தல், வாக்குப்பதிவு என தப்பி பிழைத்த காங்கிரசுக்கு வரவிருக்கும் நாடாளு மன்ற கூட்டத் தொடர் கடும் சவாலாக விளங்கும் என்று தெரிகிறது. கூட்டத் தொடரில் இந்த விவகாரம் முன் வைக்கப்பட்டால் எந்த மாதிரியான பதிலையோ அல்லது விமர்சனத்தையோ முன் வைப்பது என்று தெரியாமல் உள்ளது.
சோனியா காந்தி குடும்பத்துக்கும், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரத்துக்கும் உள்ள தொடர்பு, மைக்கேலின் பங்களிப்பு குறித்து அவையில் காரசார விவாதம் முன் வைக்கப்பட்டால் எப்படி அதனை எதிர்கொள்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் ராமர் கோயில் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றை முன் வைத்து பாஜகவுக்கு நெருக்கடி தரலாம் என்றும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, போபர்ஸ் விவகாரத்தில் கையை சுட்டுக் கொண்ட காங்கிரசுக்கு 5 மாநில தேர்தலை தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடும் சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.