உண்மைதான்.. பாஜகவிற்கு தோல்வியிலும் வெற்றிதான்!
டெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக காங்கிரசுக்கு கடும் போட்டியை கொடுத்து தேர்தல் களத்தை பரபரப்பாக வைத்துக்கொண்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் 3வது முறையாக தொடர்ந்து பாஜக ஆட்சி நடந்து வருகிறது. சிவராஜ்சிங் சவுகான் முதல்வராக உள்ளார். வியாபம் உள்ளிட்ட நாட்டை உலுக்கிய ஊழல் அந்த மாநிலத்தில் நடந்தது.
இப்படியான சூழலில்தான் அந்த மாநிலம் தேர்தலை எதிர்கொண்டது.
மாறி, மாறி முன்னிலை
ஆனால், வாக்கு எண்ணிக்கை துவங்கியது, முதலே பாஜக முன்னிலை வகித்தது. இதன்பிறகு காங்கிரஸ் முன்னிலை வகிக்க தொடங்கியது. ஆனாலும், பாஜக விடவில்லை. இரு கட்சிகளுக்கும் நடுவே கடும் போட்டி நிலவியது. யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாத சூழலில் இருந்தது.
சீட் வித்தியாசம்
காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளபோதிலும், பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் நடுவேயான சீட் வித்தியாசம் என்பது மிக குறைவு. மூன்று முறை தொடர்ச்சியாக, ஆட்சி வகிக்கும் ஒரு மாநிலத்தில், எதிர்க்கட்சிக்கு பாஜக எளிதாக தனது வெற்றியை விட்டுக்கொடுக்கவில்லை. எனவே தமிழிசை கூறியதை போல இது தோல்வியும் ஒரு வெற்றிதான் பாஜகவிற்கு. ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால், பிற எம்எல்ஏக்கள் உதவியுடன் ஆட்சியை பிடிக்க பாஜக கடும் முயற்சியை எடுக்க கூடும். அப்படியானால் தொடர்ந்து 4வது முறையாக ஆட்சியை பிடிக்க கூட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது.
ராஜஸ்தானிலும் அனல்
ராஜஸ்தானில், சச்சின் பைலட், அசோக் கெலாட் ஆகிய இரு முக்கிய தலைவர்களின் வழிகாட்டுதலில் பாஜகவை எதிர்த்தது காங்கிரஸ். ராகுல் காந்தியின் சூறாவளி சுற்றுப் பயணம் வேறு. ஆனாலும், ராஜஸ்தானில், தொங்கு சட்டசபையை நோக்கிதான் செல்கிறது நிலைமை. ஏற்கனவே ஆட்சியிலுள்ள பாஜக அரசுக்கு எதிராக மக்களின் எதிர்ப்பு அலை வீசியபோதிலும், வெற்றியை எளிதாக விட்டுத்தரவில்லை பாஜக. அங்கும் சுயேச்சைகள் துணையை நாடி காங்கிரஸ் ஓட வேண்டிய நிலைதான் உருவாகியுள்ளது.
சட்டீஸ்கர் மட்டும்தான்
சட்டீஸ்கரில்தான் பாஜக முற்றிலுமாக சண்டர் ஆகியுள்ளது. அங்கே காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. மிசோராமில் பாஜக கத்துகுட்டி. காங்கிரஸ் தனது ஆட்சியை அங்கே இழந்துள்ளது. எனவே காங்கிரசுக்குதான் அங்கு பெரும் இழப்பு. லோக்சபா தேர்தலின்போது வலுவான கூட்டணியோடு பாஜகவை எதிர்க்காவிட்டால் பாஜக அவ்வளவு எளிதில் பணிந்துவிடாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்துகிறது.