இனி இவர் வைப்பதுதான் சட்டம்.. மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கிறார் மாயாவதி!
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் மூலம் இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உருவெடுத்து இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் மூலம் இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உருவெடுத்து இருக்கிறார்.
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், டிஆர்எஸ், மிசோ தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஐந்து மாநிலங்களிலும் பாஜக பெரும் தோல்வியை தழுவி உள்ளது.
ஆனால் 2 இடங்கள் 6 இடங்கள் என்று குறைவான இடங்களை பெற்ற பகுஜன் சமாஜ் பெரிய கட்சியாக, முக்கிய கட்சியாக மாறியுள்ளது. மாயாவதி இதனால் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராகி உள்ளார்.
மத்திய பிரதேச அரசியல்
மத்திய பிரதேசத்தில் 114 இடங்களை வென்று இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்க 2 இடங்கள் தேவை. சரியாக இரண்டு இடங்களை வென்று இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்து இருக்கிறது. அதேபோல் சமாஜ்வாதி கட்சி எந்த நிபந்தனையும் இல்லாமல் தனது 1 எம்எல்ஏ ஆதரவை அளிக்க முன்வந்துள்ளது.
ராஜஸ்தான் அரசியல்
அதேபோல் ராஜஸ்தானிலும் 99 இடங்களை வென்று இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை பெற 2 இடங்கள் தேவை. அங்கு 6 இடங்களை வென்று இருக்கும் பகுஜன் சமாஜ் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் அங்கும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் இரண்டிலும் பகுஜன் சமாஜ் உதவியுடன்தான் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது.
பெரிதாக கேட்பார்
இதனால் காங்கிரஸ் ராஜஸ்தானில் 6 பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள், மத்திய பிரதேசத்தில் 2 பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களுக்கு கண்டிப்பாக அமைச்சர் பதவி வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் சட்டீஸ்கரில் உள்ள 2 பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவியை காங்கிரஸ் வழங்க வேண்டும் என்று மாயாவதி கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது. மூன்று மாநிலங்களிலும் அமைச்சரவையில் இடம் கொடுத்தால்தான் ஆதரவு என்று காங்கிரஸ் கட்சியை அவர் ''லாக்'' செய்ய வழி உள்ளது.
காங்கிரஸ் அடி பணியும்
காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் உறவு கொஞ்சம் நன்றாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உறவு அத்தனை உவர்ப்பானதாக இல்லை. காங்கிரஸ் ''பாஸ்'' மனப்பான்மையில் செயல்படுகிறது என்று மாயாவதியே ஏற்கனவே விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் பகுஜன் சமாஜின் ஆதரவை வேண்டி காங்கிரஸ் அந்த கட்சியின் விருப்பங்களுக்கு தலையசைக்கும் நிலை ஏற்படும். மாயாவதியிடம் காங்கிரஸ் காட்டிய பாஸ் மனோபாவமும் இனி செல்லுபடியாகாது.
2019ல் என்ன நடக்கும்
மாயாவதி எப்படியும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான எதிர்க்கட்சி கூட்டணியில் சேர்ந்துவிடுவார் என்றுதான் கூறுகிறார்கள். அப்படி சேரும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியின் குடுமியை கையில் வைத்து இருக்கும் மாயாவதி, பிரதமர் வேட்பாளர் ஆக ஆசைப்பட்டால் கூட ஆச்சர்யம் இல்லை. இல்லையென்றால் நான் சொல்லும் நபரைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மாயாவதி கூறவும் வாய்ப்புள்ளது. அதனால் 2019 வரை இந்திய அரசியல் இனி இவரை சுற்றித்தான் சுழல போகிறது.