கர்நாடகா உட்பட.. 5 மாநிலங்களுக்கு சீல்.. சேவைகள் முடக்கம்.. பிற மாநில மக்கள் வந்து, செல்வது கஷ்டம்
டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மார்ச் 31 ஆம் தேதி வரை மாநிலம் சீல் வைக்கப்படும் என்றும், சந்தைகளை மூடுவது, பொது போக்குவரத்தை குறைப்பது, மக்களை வீட்டுக்குள் வைத்திருக்குமாறு வலியுறுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
நேற்று, பஞ்சாபில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானது உறுதியானது. அங்கு, மொத்த நோய்த்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பல மாநிலங்களும் நகரங்களும் அறிவித்துள்ளன.
மூன்று வெளிநாட்டினர் உட்பட 63 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ள மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, புனே, தானே, நாக்பூர் போன்ற முக்கிய நகரங்களை சீல் வைத்துள்ளது. அகோலா மாவட்ட நிர்வாகம் மார்ச் 22 முதல் 24 வரை பணிநிறுத்தம் செய்ய உத்தரவிட்டது, இக்காலகட்டத்தில், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர அனைத்து நிறுவனங்களும் மூடப்படும்.
இதற்கிடையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மார்ச் 31 வரை அனைத்து உணவகங்கள், பார்கள், கிளப்புகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூடுவதாக அறிவித்தார். நான்கு பேர் அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் வெளியிட்ட வீடியோ செய்தியில், புவனேஸ்வர், அதன் இரட்டை நகரமான கட்டாக் மற்றும் பல தொழில்துறை நகரங்கள் உட்பட மாநிலத்தின் 40% இடங்கள் சீல் வைக்கப்படுவதாக அறிவித்தார்.
நேற்று மேலும் இரண்டு நோயாளிகள் கர்நாடகாவில் உறுதியானது. எனவே, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையை 14 ஆக ஏறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் மாத இறுதி வரை பகுதி அடிப்படையில் பல சேவைகளை ரத்து செய்து சீல் வைத்துள்ளது கர்நாடகா.
முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று நடத்திய, அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் இந்த முடிவை அறிவித்தார். 150க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டமாக சேருவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதால் ஏற்படும் பாதிப்புகளை தினசரி கண்காணிக்க அரசு ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது, தனிமை வார்டுகள் போன்ற வசதிகளை உருவாக்க ரூ .200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து மாநிலங்களுக்கும், வெளி மாநிலங்களில் இருந்து அவசியமின்றி யாரும் செல்ல வேண்டாம், அங்கேயிருந்து யாரும் வெளியே போக வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பெங்களூர்-ஒசூர் இடையேயுள்ள அத்திபெலே பார்டரில், பெங்களூரிலிருந்து தமிழகம் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. மிக மிக அத்தியாவசிய தேவையின்றி யாரும் பயணிக்க கூாடது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.