மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது - மத்திய அரசு
ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதால் இட ஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் இருந்து 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், மற்ற மாநிலங்களும் வழங்குகின்றன.
இந்நிலையில், இந்த இடங்களில் 50 சதவிகிதத்தை ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது, இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும்படி உத்தரவிட்டது. மேலும், இது பற்றிய சட்ட வரையறைகளை 3 மாதங்களில் உருவாக்கும்படியும், அதற்காக சிறப்பு குழுவை அமைக்கும்படியும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க முடியுமா? அல்லது இது குறித்த ஆலோசனை இன்னும் முடியாததால் 27 சதவிகிதமாவது கொடுக்க முடியுமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தி, வரும் வெள்ளிகிழமைக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுகக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு 2020-21 கல்வியாண்டில் வழங்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஓபிசி இடஒதுக்கீடு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நடப்பாண்டில் இடஒதுக்கீடு இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மேலும் காலம் தேவைப்படுவதாக மத்திய அரசு கூறி உள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதால் இட ஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு கூறியது.
மத்திய அரசின் இந்த முடிவு மனுதாரர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைத் தொடர்ந்து மனுதாரர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.