மாயாஜாலம் செய்கிறதா வாக்குப்பதிவு இயந்திரங்கள்?.. வாக்குப்பதிவு தொடங்கும் முன்னரே பதிவான ஓட்டுக்கள்
டெல்லி: டெல்லியில் நேற்று, வாக்குப் பதிவு தொடங்கியபோதே ஒரு இயந்திரத்தில் ஏற்கனவே 50 வாக்குகள் பதிவாகி இருந்ததை கண்டு வாக்களர் அதிர்ச்சியானார். இது குறித்து புகார் அளித்தும் தேர்தல் அதிகாரி இது குறித்து பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
லோக்சபா தேர்தலுக்கான 6 வது கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதில் மாளவியா நகரில் உள்ள 132 வது பூத்தில் வாக்குப் பதிவு துவங்கியது. அப்போது முதல் நபராக ஹஸ்ரானி என்பவர் வாக்களிக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்கனவே 50 வாக்குகள் பதிவாகி இருந்தது கண்டு அவர் அதிர்சியுற்றுள்ளார்.
50 ஓட்டுக்கள்
இது எவ்வாறு நடந்தது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் தேர்தல் அதிகாரிகள் இது குறித்து பதில் அளிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.எ சோம்நாத் பாரதி மாலவியா நகரில் உள்ள 116,117,122 ஆகிய எண்கள் கொண்ட வாக்குப்பதிவு மையத்தில் வாக்குஎந்திரங்கள் செயல்படவில்லை. 132 ம் எண் கொண்ட வாக்கு மையத்தில், ஹஸ்ரானி என்பவர் முதல் நபராக வாக்களிக்கச் சென்றபோது வாக்குப்பதிவு தொடங்காமலேயே வாக்குஎந்திரத்தில் 50 வாக்குகள் பதிவானதாக காட்டியுள்ளது. இது எவ்வாறு நடந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மிஷின் பிரச்சினை
இதுகுறித்து டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி எந்தவிதமான கருத்தையும் கூற மறுத்துவிட்டார் எனவும் சோம்நாத் பாரதி கூறியுள்ளார்.
இது மட்டும் அல்லாது மதிலா மஹால், பாலிமாறன் பகுதியில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை என்று காங்கிரஸின் சாந்தினி சவுக் தொகுதியின் வேட்பாளர் ஜே.பி. அகர்வால் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆதரவாளர்கள் பகுதி
இதேபோல, ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள பகுதியான திலக் நகரிலும் 27-ம் எண் கொண்ட வாக்குமையத்திலும் வாக்குப பதிவு இயந்திரம் காலையில் இருந்தே வேலை செய்யவில்லை. இந்தப் பகுதிகளில் வேண்டுமென்றே வாக்குப்பதிவு இயந்திரங்களை செயல்படவிடாமல் செய்துள்ளார்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஜர்நைல் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்குப்பதிவு நிறுத்தம்
டெல்லியில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், மக்கள் வாக்களிக்க பெரிதும் சிரமப்பட்டனர். டெல்லியில் உள்ள மதியா மஹால் பகுதியில் இருந்த 84,85,86 எண்கள் கொண்ட வாக்குப்பதிவு மையத்தில் எந்திரங்கள் முறையாக வேலை செய்யாததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்பாளர்கள் பெயர்கள்
இது குறித்து நிருபர்களிடம் பேசிய டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் அடுத்த 10 நிமிடங்களில் சரி செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவிகிறது ஆனால் அதில் உண்மையில்லை. நஜாப்கார்க் தொகுதியில் பல வாக்குப்பதிவு மையங்களில், வாக்கு இயந்திரங்களில் உள்ள வேட்பாளர்களின் பெயர் சரியாகத் தெரியாததால், மக்கள் வாக்களிக்க சிரமப்படுகின்றனர். பலரது வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன எனக் கைலாஷ் கெலாட் குற்றம்சாட்டினார்