'அம்மா உணவகம்போல் 500 'கலைஞர் உணவகம்' அமைக்கப்படும்'.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!
டெல்லி: நாடு முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்.சக்கரபாணி பேசும்போது கூறியதாவது:- தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை 'அம்மா உணவகம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உளளாட்சி அமைப்புகளின் மூலமாக நடத்தி வருகிறது.
தரமான உணவை மானிய விலையில் ஏழை, எளிய மக்களுக்கும் தேவைப்படுவோர்க்கும் இதன் மூலம் வழங்கி வருகிறது. இந்த எண்ணிக்கை மாவட்டத் தலைநகரங்களிலுள்ள மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவும் உறவினர்கள். நண்பர்கள் மற்றும் வெளி நோயாளிகளின் நலன் கருதி நடத்தப்படும் உணவகங்களையும் உள்ளடக்கியதாகும்.
இந்த உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் பல்வகை சாதங்கள் ( சாம்பார் கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாதம் ) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் பகலிலும், 2 சப்பாத்தி பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன. 1.6.2021 முதல் 18.11.2021 வரை 15 கோடிக்கும் மேலானோர் இந்த உணவகங்கள் வழியாக பயனடைந்துள்ளனர் என தெரிவித்த அமைச்சர்
30,490 கட்டுமான தொழிலாளர்களும் பயனடைந்துள்ளனர். கொரோனா காலத்திலும் இதர பேரிடர் காலங்களிலும் இந்த உணவகங்களில் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் இதே போன்று கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கபட உள்ளன. இந்த திட்டத்திற்காக செப்டம்பர் மாதம் வரை 2021-22ம் நிதியாண்டில் 3227 மெட்ரிக் டன் அரிசியும் 362 டன் கோதுமையும் பயன்படுத்தப்பட்டுள்ளது .
அடுத்த 3 சீசன்களுக்கு கலக்கவுள்ள தல தோனி.. சிஎஸ்கே தக்க வைக்கும் மற்ற 3 வீரர்கள் யார்? பரபர தகவல்
ஒரு உணவகம் நடத்த சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ .3.5 லட்சம் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தை வெற்றிகரமாகவும் தொடர்ந்து நடத்திடவும் தேவையான அனைவருக்கும் விரிவுபடுத்திடவும் மத்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 ன் கீழ் 100 விழுக்காடு நிதி உதவி வழங்கிட வேண்டும் .இவ்வாறு அமைச்சர் ஆர்.சக்கரபாணி பேசினார்.