60 கிமீ.. 5 ரூட்கள்.. டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி.. கிடைத்தது அனுமதி.. விவசாயிகள்
டெல்லி: குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பு நடத்த டெல்லி காவல்துறையிடம் அனுமதி பெற்றதாக விவசாயிகள் சங்கங்கள் கூறியுள்ளன. 60 கிலோமீட்டர் தூரத்திற்கு 5 ரூட்களில் பேரணி நடைபெறும் என்று கூறினார்கள்.
ஆனால் டெல்லியின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், இதுபற்றி கூறுகையில், மிகவும் சென்சிட்டிவ்வான விவகாரம். வாகனங்களின் பதிவு எண் மற்றும் உரிமையாளர்களின் அடையாளம் போன்ற விவரங்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட பின்னரே பேரணியை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். என்றார்.
முன்னதாக குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு காவல்துறை அதிகாரிகளை கீர்த்தி கிசான் யூனியனின் துணைத் தலைவர் ராஜீந்தர் சிங் தீப் சிங்வாலா, உள்பட முக்கிய நிர்வாகிகள் சந்தித்தனர். போலீசாரை சந்தித்த பின் ராஜீந்தர் சிங் தீப் சிங்வாலா பேசுகையில், விவசாயிகள் 60 கி.மீ நீளத்திறகு அணிவகுப்பை நடத்துவார்கள், அதில் பாதி தூரம் தேசிய தலைநகரான டெல்லிக்குள் இருக்கும்.
உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள் காட்டி, 70,000 முதல் 1 லட்சம் டிராக்டர்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை எங்களிடம் கூறியது. நாங்கள் அவுட்டர் ரிங் ரோடு வழியைப் பின்பற்றினால், பிரதான குடியரசு தின நிகழ்வில் அணிவகுப்பின் தாக்கம் குறித்து காவல்துறையினர் கவலைப்பட்டனர். வழியை மாற்ற நாங்கள் ஒப்புக் கொண்டால் காவல்துறை எங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர் என்றார்.
இதனிடையே திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று அறிவித்துள்ள விவசாயிகள், குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்காது என்று உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் குடியரசு தின நிகழ்வுகளில் ஹரியானா அமைச்சர்கள் / அரசியல் தலைவர்களை எதிர்க்க வேண்டாம் என்று விவசாயிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் ஹரியானா பி.கே.யூ தலைவர் ஜி.எஸ்.சருனி சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேநேரம் குடியரசு தினத்தை தவிர மற்ற நாட்களில் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் மூலம் விவசாயிகள் அமைச்சர்களை தொடர்ந்து எதிர்ப்பார்கள் என்றார்.