வருமானம் ரூ.100 கோடிக்கு மேல்... இந்தியாவில் ஆண்டுக்கு, ஆண்டு கோடீஸ்வரர்கள் அதிகரிப்பு
டெல்லி: 2017-2018 நிதியாண்டில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியவர்கள் மொத்தம் 61 பேர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2016-2017ம் ஆண்டில் 38 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்த்துள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், வருமான வரித்துறை படிவத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பதாக 2014-2015 ஆம் ஆண்டில் தனிநபர்களாக 24 பேர் தெரிவித்திருந்தனர். இந்த எண்ணிக்கை சீராக வளர்ச்சி அடைந்தது.
இந்தநிலையில், 2017-2018 ஆம் ஆண்டில் 100 கோடி வருமானம் உள்ளதாக கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதித்துறையின் மற்றொரு இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசுகையில், பினாமி சொத்து பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.6,900 மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்
மேலும், டிசம்பர் 2018 வரை வருமான வரி அதிகாரிகள் 2,000 க்கும் அதிகமான பினாமி பரிவர்த்தனைகளை அடையாளம் கண்டுள்ளனர் என்றும் கூறினார்.