வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்க நாளை முதல் மே 13 வரை 64 சிறப்பு விமானங்கள் இயக்கம்
டெல்லி: கொரோனா லாக்டவுன்களால் வெளிநாடுகளில் தத்தளித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்பதற்கு நாளை முதல் மே 13-ந் தேதி வரை 64 சிறப்பு விமானங்களை இயக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனாவால் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான மனித உயிர்களை கொரோனா வைரஸ் தொற்று நோய் குடித்திருக்கிறது.
இந்த கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பெரும்பாலான நாடுகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நாடுகளில் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தத்தளித்து வருகின்றனர்.
ஷார்ஜாவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் 47 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
64 சிறப்பு விமானங்கள்
தற்போது இவர்களை மீட்டு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்க நாளை முதல் மே 13-ந் தேதி வரை 64 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார்.
தோஹாவுக்கு விமானங்கள்
இது தொடர்பாக ஹர்தீப்சிங் கூறியதாவது: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்காக மே 7 முதல் மே 13 வரை 64 விமானங்கள் இயக்கப்படும். தோஹாவிலிருந்து இந்தியாவுக்கு இரண்டு சிறப்பு விமானங்களை இந்திய அரசு இயக்க உள்ளது. மே 7 ஆம் தேதி தோஹா முதல் கொச்சி வரையிலும், மே 10 ஆம் தேதி தோஹாவிலிருந்து திருவனந்தபுரம் வரையிலும் சிறப்பு விமானம் இயக்கப்படும்.
எவ்வளவு கட்டணம்?
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் விமானங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். அனைத்து பயணிகளிடமும் திருப்பி அனுப்பும் விமானங்களில் கட்டணம் வசூலிக்கப்படும். லண்டன் - டெல்லி விமானத்தில் ஒரு பயணிக்கு ரூ .50,000 கட்டணம் பெறப்படும். டாக்கா-டெல்லி விமானத்திற்கு ரூ .12,000 கட்டணம் பெறப்படும்.
தமிழகத்தில் தரை இறங்கும் விமானங்கள்
திருப்பி அனுப்பும் விமானங்களில் வருபவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு 14 நாள் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்படுவார்கள். பயணிகளை அழைத்து வரும்போது பரிந்துரைக்கப்பட்ட அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படும். வெளிநாட்டிலிருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்கான 64 விமானங்களில், ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 11 விமானங்கள் தமிழ்நாட்டில் தரையிறங்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் கூறினார்.
பினராயி விஜயன் வேண்டுகோள்
இதனிடையே வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும்போதே உரிய கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான மருத்துவர் குழுவை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்; அப்படி மத்திய அரசு அனுப்பி வைக்காமல் போனால் கேரளா அரசே மருத்துவர் குழுவை அனுப்பவும் தயார் என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.