இந்தியாவில் 4 மாநிலங்களில் இருந்து மட்டும் 67% கொரோனா நோயாளிகள்
டெல்லி: இந்தியாவின் 4 மாநிலங்களில் இருந்து மட்டும் 67% கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 3,867 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து 54 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா பாதிப்பு-147 பேர் மரணம்- 50 ஆயிரத்தை நெருங்கும் மகாராஷ்டிரா
4 மாநிலங்கள்...
இந்தியாவைப் பொறுத்தவரையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய 4 மாநிலங்கள்தான் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி உள்ளன. இந்தியாவின் மொத்த கொரோனா நோயாளிகளில் 67% பேர் இந்த 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 47 ஆயிரத்தை கடந்துவிட்டது.
முதல் 2 இடங்கள்
மகாராஷ்டிராவில் மொத்தம் இங்கு 47,190 நோயாளிகள் உள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தம் 1,577 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர். இந்தியாவிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் மாநிலம் மகாராஷ்டிராதான். மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. குஜராத் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்துள்ளது. குஜராத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 829 ஆக உள்ளது.
டெல்லி- வட இந்தியா
டெல்லியில் கொரோனா பாதிப்பு 12,910 ஆக உள்ளது. இதுவரை டெல்லியில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டி 10 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. கேரளா, ஜார்க்கண்ட், அஸ்ஸாம், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசங்களில் 1,000க்கும் குறைவான பாதிப்புதான் உள்ளது.
குறைவான மாநிலங்கள்
கோவா, அந்தமான், புதுவை, மேகாலயா, மணிப்பூர் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 100-க்கும் குறைவாகவே உள்ளது. தத்ரா நாக்ர் ஹவேலி, அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் ஒருவர்தான் கொரோனா நோயாளி. இந்த மாநிலங்களில் அனைவரும் கொரோனாவில் இருந்து குணமடைந்தும் விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.