டெல்லி உட்பட 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 6-ம் கட்ட வாக்குப் பதிவு!
டெல்லி: 7 மாநிலங்களின் 59 தொகுதிகளில் நாளை 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தல் திருவிழா இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. 59 தொகுதிகளில் 6-வது கட்டமாக நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 14, ஹரியானாவில் 10, பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8, டெல்லியில் 7 தொகுதிகள், ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 6-வது கட்ட வாக்குப் பதிவில் மொத்தம் 968 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
6-வது கட்ட வாக்குப் பதிவில் விஐபி வேட்பாளர்கள் பலர் களத்தில் உள்ளனர். டெல்லி மாஜி முதல்வர் ஷீலா தீட்சித், சமாஜ்வாதி கட்சித் தலைவ அகிலேஷ் யாதவ், மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், பாஜகவின் புதிய பிரசார பீரங்கி சாத்வி பிரக்யாசிங் தாக்கூர், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விஜேந்தர்சிங், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், காங்கிரஸ் பொதுச்செயலர் ஜோதிராதித்ய சிந்தியா, மாஜி கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோர் விஐபி வேட்பாளர்கள்.
2014 லோக்சபா தேர்தலில் நாளை தேர்தலை எதிர்கொள்ளும் 59 தொகுதிகளில் பாஜக 45 இடங்களைக் கைப்பற்றியது. திரிணாமுல் காங்கிரஸ் 8, காங்கிரஸ் 2, சமாஜ்வாதி கட்சி 1, எல்ஜேபி 1 இடத்தையும் கைப்பற்றியிருந்தன. ஆனால் இம்முறை பாஜக நிச்சயம் 45 தொகுதிகளை கைப்பற்ற முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளன. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் பகுஜன்சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி பாஜகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.