மேனகா, அகிலேஷ், திக்விஜய்சிங், பிரக்யா, ஷீலா தீட்சித், கவுதம் காம்பீர்.. 6-ம் கட்ட தேர்தல் விஐபிகள்!
டெல்லி: லோக்சபா தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறும் தொகுதிகளில் பாஜகவின் மேனகா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பாஜகவின் புதிய முகம் சாத்வி பிரக்யா., மாஜி கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் என ஏராளமான நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை 6-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஹரியானா, மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதில் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 14 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். ஹரியானாவில் 10 தொகுதிகளிலும் பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8, ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும்.
ஆசம்கரில் அகிலேஷ்
உத்தரப்பிரதேசத்தில் ஆசம்கர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் களத்தில் உள்ளார். இத்தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக இருப்பவர் அவரது தந்தை முலாயம்சிங் யாதவ். அகிலேஷ் யாதவை எதிர்த்து பாஜக வேட்பாளராக நடிகர் நிராகுவா நிறுத்தப்பட்டுள்ளார். ஆசம்கரில் முஸ்லிம்கள், யாதவ் சமூகத்தினர் தீர்மானிக்கும் சக்திகள் என்பதால் எளிதாக வென்றுவிடலாம் என்பது அகிலேஷின் கணக்கு.
வெல்வாரா மேனகா?
உ.பி.யின் சுல்தான்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2014 தேர்தலில் அவரது மகன் வருண் காந்தி வென்றிருந்தார். மேனகாவுக்கு எதிராக பகுஜன் சமாஜ் வேட்பாளர் சந்திரா பத்ரா சிங், காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் சிங் களத்தில் உள்ளனர். வருண்காந்தி கடந்த முறை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார். ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி இம்முறை மேனகா காந்திக்கு கிடைக்குமா? என்பது சந்தேகமே.
கரை சேருவாரா பிரக்யா
பாரதிய ஜனதா கட்சியின் பிரசார பீரங்கியாக புதிய முகமாக களம் இறக்கப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்கூர், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் முதுபெரும் தலைவர் திக்விஜய் சிங் களம் காணுகிறார். போபால் தொகுதி எம்.பி.யான உமாபாரதி ஏற்கனவே பிரக்யா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் பாஜகவை ஆதரித்த 7,000 சாமியார்கள் ராமர் கோவில் விவகாரத்தில் அக்கட்சி மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அத்துடன் திக்விஜய்சிங்குக்கு ஆதரவாக யாகங்களையும் நடத்தினர். இத்தேர்தலில் வென்றால்தான் சாத்வி பிரக்யாவுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
ஜோதிராதித்யா சிந்தியா
மேற்கு உ.பி.யின் பொதுச்செயலரான ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸின் இளம் தலைவர்களில் ஒருவர். 2002 முதல் குணா லோக்சபா தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். இம்முறையும் அங்கே களம் காணுகிறார். 2014 லோக்சபா தேர்தலில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சிந்தியா வென்றார். அவரை எதிர்த்து தற்போது பாஜகவின் கேபி யாதவ் களத்தில் இருக்கிறார்.
ஷீலா தீட்சித்
டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது. அவருக்கு எதிராக பாஜகவின் சிட்டிங் எம்.பி. மனோஜ் திவாரி மீண்டும் போட்டியிடுகிறார்
விளையாட்டு வீரர்களின் எதிர்காலம்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விஜேந்திர சிங்கை தெற்கு டெல்லி வேட்பாளராக களம் இறக்கியுள்ளது காங்கிரஸ். அவரை எதிர்த்து பாஜகவின் சிட்டிங் எம்.பி. ரமேஷ் பிதூரி மீண்டும் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் ஆம் ஆத்மியின் ராகவ் சதாவும் களம் காணுகிறார். கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. விளையாட்டில் இருந்து அரசியலுக்கு தாவிய இவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்தல்.