ஓமிக்ரான் கொரோனா.. இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்குப் பல புதிய கட்டுப்பாடுகள்.. மத்திய அரசு அதிரடி
டெல்லி: ஓமிக்ரான் உருமாறிய கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு மத்திய அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
Recommended Video
உலகில் எந்தவொரு நாடும் வைரஸ் பாதிப்பை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்ததில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் வைரஸ் பரவலை ஒழிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சில நாடுகள் மட்டுமே வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருந்தது. இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் உருமாறிய கொரோனா உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
இந்த புதிய உருமாறிய கொரோனா அதிக மாறுபாடுகளைக் கொண்டிருப்பதால் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகப் பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குப் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தச் சூழலில் மத்திய அரசும் சர்வதேச பயணிகளுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
கொரோனா நெகடிவ் சான்றிதழ்
இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள் கடைசி 14 நாட்கள் எங்கே இருந்தனர் என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவிட் நெகடிவ் முடிவுகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதேபோல ஆபத்தான நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகடிவ்வாக இருந்தாலும் கூட அவர்கள் கட்டாயம் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
டிசம்பர் 1 முதல்
இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள், 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா நெகடிவ் சான்றிதழைப் பயணிகள் Air Suvidha போர்டலில் அப்லோட் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலியான கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நாடுகள்
ஆபத்தான நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது ஆபத்தான நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் நெகடிக் என முடிவு வந்த பின்னரும் கூட 7 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும். மீண்டும் 8ஆம் நாள் சோதனையில் கொரோனா நெகடிவ் முடிவு கிடைக்க வேண்டும். அதன் பின்னரும் கூட மேலும் 7 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஓமிக்ரான் கொரோனா.. இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்குப் பல புதிய கட்டுப்பாடுகள்.. மத்திய அரசு அதிரடி
கூடுதல் கட்டுப்பாடுகள்
அதாவது ஆபத்தான நாடுகள் பட்டியலில் இருந்து வரும் பயணிகள், இந்தியா வந்த பிறகு 15 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். 2 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும். நவம்பர் 26 நிலவரப்படி பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஆபத்தான நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
கொரோனா உறுதியானால்?
இந்தியா வந்த பிறகு அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கும்பட்சத்தில் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்காக அவர்களின் மாதிரிகள் அனுப்பப்படும். அவர்கள் சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதர நாடுகளில் இருந்து வருவோர் சுய தனிமையில் இருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.