லிபியாவில் 7 இந்தியர்கள் கடத்தல்... அந்த நாட்டு அரசுடன் இந்தியா பேச்சவார்த்தை!
டெல்லி: இந்தியாவுக்கு வருவதற்காக லிபியாவின் திரிபோலி விமான நிலையத்துக்கு வரும் வழியில் கடத்தப்பட்ட ஏழு இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
லிபியாவின் அஷ்வெரிப் என்ற இடத்தில் இருந்து திரிபோலியில் இருக்கும் விமான நிலையத்துக்கு கடந்த மாதம் ஏழு இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது, இவர்கள் கடத்தப்பட்டனர். இவர்கள் ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ''கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறோம். அவர்களது உறவினர்கள் மீட்கப்பட்டு விடுவார்கள் என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளோம். அவர்களை கடத்தல்காரர்களிடம் இருந்து விடுவிப்பதற்கு லிபியா அரசிடம் பேசி வருகிறோம். கடத்தப்பட்டவர்கள் அனைவரும் அங்கு கட்டிட மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர்.
கடத்தல்காரர்களிடம் அவர்கள் பணியாற்றிய நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களது புகைப்படத்தை காட்டி பத்திரமாக இருப்பதை உறுதி செய்துள்ளனர். அவர்களை நல்லபடியாக நடத்துவதாகவும் உத்திரவாதம் அளித்துள்ளனர். துனிஷியாவில் இருக்கும் இந்திய தூதரகம் லிபியா அரசுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது. மேலும் சர்வதேச அமைப்புகளுடனும் அவர்களை விடுவிக்க பேசி வருகிறது'' என்றார்.
சமூகநீதியின் தூண் சாய்ந்துவிட்டது... ஒடுக்கப்பட்டோருக்காக ஒலித்தக் குரல் ஓய்ந்துவிட்டது -ஸ்டாலின்
லிபியாவில் 2011ல் முகம்மது கடாபியின் ஆட்சி கவிழ்ந்த பின்னர் அங்கு வன்முறை பெரிய அளவில் நடந்து வருகிறது. லிபியாவில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால், அங்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டு என்று 2015, செப்டம்பரில் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து, 2016ஆம் ஆண்டில் கண்டிப்பாக யாரும் லிபியாவுக்கு பயணம் செய்யக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்து இருந்தது. இன்னும் அந்த தடை அமலில் இருக்கிறது.