70 லட்சம் ஜம்மு காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிப்பு: ப. சிதம்பரம் வேதனை
டெல்லி: குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த நாளில் 70 லட்சம் காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள். நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை எந்த ஒரு அரசாலும் பறித்துவிட முடியாது.
இந்த குடியரசு தின நாளில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது.
Remember that today as we think of the 70 lakh people of the Kashmir valley whose freedoms have been taken away, including those in custody for over 6 months. without charges.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 26, 2020
ஜம்மு காஷ்மீரில் எந்த வித குற்றச்சாட்டுமே இல்லாமல் 6 மாதங்களுக்கும் மேலாக பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது.
தேசியக் கொடியை ஏற்றுகிற இந்த நாளில் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் நாம் அதிகரிக்க வேண்டும். நாட்டின் எந்த ஒரு பகுதியில் மக்களுக்கான சுதந்திரம் மறுக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த தேசத்தின் மக்களுக்குமான சுதந்திரம் மறுக்கப்படுவதாகும்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.