74வது சுதந்திர தினம் கோலாகலம்.. செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் மோடி
டெல்லி: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய கொடியேற்றி வைத்தார்.
டெல்லியில் உள்ள செங்கோட்டையில், 74 ஆவது இந்திய விடுதலை நாள் - சுதந்திர தின கொண்டாட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை ஏற்றி வைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னமான செங்கோட்டையின் மதில்களிலிருந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
செங்கோட்டையின் லாகூர் வாயிலுக்கு, காலை 07.18 மணிக்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்கும், பாதுகாப்புத்துறைச் செயலர் டாக்டர் அஜய் குமாரும் வரவேற்றனர்.
ராணுவப் படை தலைமை அதிகாரி டெல்லி பகுதியின் லெஃப்டினன்ட் ஜெனரல் விஜய் குமார் மிஸ்ராவை (சி ஓ சி, டெல்லிபகுதி) பாதுகாப்புச் செயலர் பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு ஜி ஓ சி தில்லி பகுதி, பிரதமரை வணக்கம் செலுத்தும் தளத்திற்கு அழைத்துச் சென்றார்.
பன்முகத் தன்மை இந்தியாவின் பலம்.. நமது ஒற்றுமை உலகிற்கு பாடம்.. சுதந்திர தின உரையில் மோடி புகழாரம்
அங்கு முப்படைகளையும், காவல்துறைப் பாதுகாப்புப் படையையும் சேர்ந்த வீரர்கள் நரேந்திர மோடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்ட பிறகு பிரதமர் செங்கோட்டையில் மதில் சுவர்களுக்குச் சென்றார் மோடி. அங்கு அவர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்; பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத்; கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்வீர் சிங்; விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மர்ஷல் கே எஸ் ப டோரியாஆகியோரால் வரவேற்கப்பட்டார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றினார்.