மத்திய அரசு அறிவித்த சிறப்பு ரயில்களில் 75% உபி, பீகாருக்குதான்!
டெல்லி: பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் சிறப்பு ரயில்களில் 75% உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாருக்குதான் இயக்கப்பட்டுள்ளன.
லாக்டவுன் அமலில் உள்ளதால் பிற மாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தவித்து வந்தனர். இவர்களில் பலர் நடைபயணமாக பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.
இன்னும் பலர் கிடைத்த வண்டியில் ஏறி பயணித்தனர். இப்படி பயணித்த புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டனர். பலர் நடுவழியிலேயே மாண்டும் போயினர்.
தொடங்கும் ரயில் சேவை.. இ - டிக்கெட் இருந்தால் மட்டுமே ஸ்டேஷனுக்குள் அனுமதி.. அதிரடி கட்டுப்பாடு!
அவுரங்காபாத் துயரம்
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து மத்திய பிரதேசம் நோக்கி தண்டவாளத்திலேயே நடைபயணமாக சென்றனர். பின்னர் அசதி காரணமாக அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் உறங்கினர். அப்போது சரக்கு ரயில் மோதி 17 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மரணித்தனர். ஒட்டுமொத்த தேசத்தையே இச்சம்பவம் உறைய வைத்தது.
மத்திய அரசின் சிறப்பு ரயில்கள்
இதனிடையே மே 1-ந் தேதி மத்திய அரசு பிற மாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு, வழிகாட்டுதல்கள் இல்லாமலும் புலம் பெயர் தொழிலாளர்களின் நடைபயணங்கள், சைக்கிள் பயணங்கள் தொடருகின்றன. இதனிடையே மத்திய அரசு பெரும்பாலான சிறப்பு ரயில்களை வட இந்திய மாநிலங்களுக்குத்தான் இயக்கி இருக்கிறது.
உ.பி, பீகாருக்கு அதிக ரயில்கள்
உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்குத்தான் 75% ரயில்களை இயக்கி இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதிகளுக்குத்தான் அதிக ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 44% ரயில்கள் உத்தரப்பிரதேசத்துக்கு இயக்கப்பட்டிருக்கின்றன. 30%-க்கும் அதிகமான ரயில்கள் பீகாருக்கு இயக்கப்பட்டிருக்கின்றன. சிறப்பு ரயில்களை அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கும் மேற்கு வங்கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.
மேலும் 300 ரயில்கள்
மே 1-ந் தேதி முதல் மே 10-ந் தேதி வரை 366 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 287 ரயில்கள் குறிப்பிட்ட மாநிலங்களை சென்றடைந்துவிட்டன. மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிஷா ஆகிய 3 மாநிலங்களுக்கும் கணிசமான ரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. இதனிடையே மேலும் 300 ரயில்களை இயக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், மாநில அரசுகள் கூடுதல் ரயில்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.