கிங் மேக்கர்கள்.. அதிரப் போகும் டெல்லி.. அடுத்த பிரதமர் இவர்கள் கையில்தான்!
டெல்லி: மத்தியில் புதிய ஆட்சியைத் தீர்மானிப்பவர்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 8 கிங்மேக்கர்கள் களத்தில் உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவும் காங்கிரஸும் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைக் கைப்பற்ற இயலாமல் போனால் மாநில கட்சிகளைச் சேர்ந்த கிங்மேக்கர்கள்தான் புதிய அரசை தீர்மானிப்பார்கள். யார் யார் அந்த கிங் மேக்கர்கள்?
தற்போதைய நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடம் விலகி இருக்கிறார் பிஜூ ஜனதா தளத்தின் தலைவரும் ஒடிஷா முதல்வருமான நவீன் பட்நாயக். லோக்சபாவில் 5-வது பெரிய கட்சி பிஜூ ஜனதா தளம். 2014 தேர்தலில் 18 இடங்களைக் கைப்பற்றியது பிஜூ ஜனதா தளம். இம்முறை 15 இடங்களில் பிஜூ ஜனதா வெல்லும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள். பிரதமர் மோடிக்கும் நவீன் பட்நாயக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பிஜூ ஜனதா தளம்.
திட்டமிட்டபடி நடக்கும் அமித் ஷா பிளான்.. சிதறும் எதிர் கட்சிகள்.. வேலை செய்யும் பார்முலா!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ்
பாஜகவின் படுதீவிர ஆதரவாளராக கருதப்படுபவர் சந்திரசேகர ராவ். கடந்த தேர்தலில் தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் 10 இடங்களில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வென்றது. பாஜக, காங்கிரஸ் அல்லாத ஒரு அணியை அமைக்க படுதீவிரமாக முயற்சித்தார் சந்திரசேகர ராவ். ஆனால் பாஜகவுக்கு அது உதவக் கூடும் என்பதால் அப்படியான ஒரு அணி அமையவில்லை.
ஜெகன் மோகன் ரெட்டி
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவில் இம்முறை அதிக இடங்களைக் கைப்பற்றக் கூடும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள். அதனால் பாஜகவும் காங்கிரஸும் ஜெகன் மோகனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக கூறி ஜெகன் மோகனை பாஜகவும் வளைத்துப் போடவே முயற்சிக்கும். லோக்சபாவில் ஜெகன் கட்சிக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர். தற்போதைய தேர்தலில் 20 இடங்களை ஜெகன் கட்சி வெல்லும் என கூறப்படுகிறது.
மேற்கு வங்க முதல்வர் மமதா
இந்திராவுக்குப் பின்னர் அரசியலில் இரும்புப் பெண்மணியாக அழைக்கப்படுபவர் மமதா பானர்ஜி. லோக்சபாவில் 33 எம்.பிக்கள் உள்ளனர். மத்தியில் பாஜக அல்லாத அரசு அமைய வேண்டும் என்பதில் படுதீவிரமாக இருப்பவர் மமதா பானர்ஜி. எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டிக் கொண்டிருப்பவர் மமதா.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி
பாஜகவின் காவி கொடி பட்டொளி வீசி பறந்த உத்தரப்பிரதேசத்தில் அக்கட்சிக்கு செக் வைக்கும் வகையில் பரம வைரியான சமாஜ்வாதி கட்சியுடன் கை கோர்த்தவர் மாயாவதி. இந்த கூட்டணியால் உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பாதிக்கும்; மத்தியில் பாஜக ஆட்சி அமைவதை இந்த கூட்டணிதான் தடுக்கும் என கூறப்பட்டு வந்தது. தேர்தல் முடிவுகளைப் பொறுத்து மாயாவதியின் விஸ்வரூபம் வெளியே வரும்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்
பாஜகவை தந்தை முலாயம்சிங் ஆதரித்த போதும் தேர்தல் களத்தில் அக்கட்சிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கினார் அகிலேஷ். இந்த கூட்டணி வெல்லுமா? அல்லது பாஜக அணி பக்கம் சாயுமா? என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என முதலில் பிரகடனம் செய்தது திமுக தலைவர் ஸ்டாலின். பிரதமர் மோடி மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தவரும் ஸ்டாலின். தற்போது ஸ்டாலின், மோடி அல்லாத பாஜக அரசுக்கு ஆதரவு தருவாரோ? என்கிற சந்தேகம் கிளம்பியுள்ளது. இருப்பினும் தற்போதைய நிலையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலேயே திமுக நீடிக்கிறது.
சந்திரபாபு நாயுடு
காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பவர் சந்திரபாபு நாயுடு. சந்திரபாபு நாயுடு தலைமையில் டெல்லியில் இன்று 21 கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸை உள்ளடக்கிய மத்திய அரசை உருவாக்குவதில் படுதீவிரமாக இருக்கிறார் சந்திரபாபு நாயுடு.