சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 ராஜ்யசபா எம்.பிக்களின் தர்ணா போராட்டம் வாபஸ்
டெல்லி: ராஜ்யசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய தர்ணா நடத்திய 8 எம்.பிக்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் எம்.பிக்களுடன் இணைந்து மழைக்கால கூட்டத் தொடரை புறக்கணிப்போம் என்று 8 எம்.பிக்களும் அறிவித்துள்ளனர்.
ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்களை முறையாக விவாதித்து நிறைவேற்றவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தால் ஞாயிற்றுக்கிழமையன்று ராஜ்யசபாவில் பெரும் அமளி ஏற்பட்டது. அப்போது சபை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சபையை நடத்திக் கொண்டிருந்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களுக்கு டீ வாங்கி கொண்டு வந்த ராஜ்யசபா துணை தலைவர் .ட்விஸ்ட்
மைக் உடைப்பு- எம்.பிக்கள் சஸ்பெண்ட்
மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் கிழித்து எறியப்பட்டன. இந்த களேபரத்தில் சபைத் தலைவர் இருக்கை முன் இருந்த மைக் உடைக்கப்பட்டது. இதனையடுத்து சபையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரெய்ன் உள்ளிட்ட 8 எம்.பிக்களை சபை தலைவர் வெங்கையா நாயுடு, கூட்டத் தொடர் முழுவதற்கும் சஸ்பெண்ட் செய்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
தங்கள் மீதான இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்தினர். இன்று காலை ராஜ்யசபா துணைத் தலைவர், போராட்டம் நடத்திய 8 எம்.பிக்களும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் இதனை வாங்க மறுத்து எம்.பிக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ராஜ்யசபாவில் வெங்கையா நாயுடு விளக்கம்
இதனிடையே இன்று ராஜ்யசபாவில், எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் எம்.பிக்கள் செயல்பட்டனர். சஸ்பெண்ட் நடவடிக்கை என்பது எம்.பிக்களுக்கு எதிரானது அல்ல. எம்.பிக்களின் செயல்பாடுகளுக்கு எதிரானது மட்டுமே என்று ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு விளக்கம் தந்தார்.
எம்.பிக்கள் தர்ணா வாபஸ்
இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிப்போம் என அறிவித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்திய 8 சஸ்பெண்ட் எம்.பிக்களும் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டனர். மேலும் மழைக்கால கூட்டத் தொடரை புறக்கணிக்கும் போராட்டத்தில் தாங்களும் இணைவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.