விவசாயிகள் போராட்ட கருத்து கணிப்பு: மக்களின் ஆதரவு யாருக்கு?
டெல்லி : விவசாயிகள் போராட்ட விவகாரத்தை மத்திய அரசு சரியாக கையாள்கிறதா என நடத்தப்பட்ட சர்வேயில், 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் நவம்பர் 26 முதல் டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் அதிக அளவில் இதில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களை சமாதானப்படுத்த அரசு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எதுவும் பலனளிக்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தை கைவிட தொடர்ந்து மறுத்து வருகின்றனர். போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
அரசு உறுதி
புதிய வேளாண் சட்டங்கள் பசுமை புரட்சியை ஏற்படுத்தும் என மோடி அரசு நம்பிக்கையுடன் கூறியும் விவசாயிகள் அதனை ஏற்க மறுத்து வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.
கருத்துக் கணிப்பு
இந்நிலையில் Mood of the Nation சார்பில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு சரியாக கையாள்கிறதா என்ற கேள்விக்கு 80 சதவீதம் பேர் அரசின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
யாருக்கு சாதகம்
வேளாண் சட்டங்கள் யாருக்கு சாதகமாக உள்ளது - விவசாயிகளுக்கா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கா என்ற கேள்விக்கு 34 சதவீதம் பேர் விவசாயிகளுக்கு உதவக் கூடியது என தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 32 சதவீதம் பேர் கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு என்றும், 25 சதவீதம் பேர் இரு தரப்பினருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
சட்டத்தை திரும்பப் பெறலாமா
புதிய வேளாண் சட்டங்களில் அரசு திருத்தம் கொண்டு வர வேண்டுமா அல்லது விவசாயிகள் வலியுறுத்துவது போல் திரும்பப் பெற வேண்டுமா என்ற கேள்விக்கு, 55 சதவீதம் பேர் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், 28 சதவீதம் பேர் திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.