டெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சி.ஏ.ஏ.வை எதிர்த்து வடகிழக்கு டெல்லியில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பாக சி.ஏ.ஏ. ஆதரவு போராட்டத்தை பாஜகவினர் நடத்தினர். இதனால் வன்முறை வெடித்தது.
வடகிழக்கு டெல்லியில் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இஸ்லாமியர்களின் வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்திருக்கிறது.
இதில் 21 பேர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பலியாகி உள்ளனர். மேலும் 82 பேர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் மொத்தம் 250 பேர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை உயிரிழந்தோரில் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீ வைக்கப்பட்டும் ஆசிட் வீசப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கண்ணீர்புகை குண்டுகள் தாக்குதலாலும் பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 350 துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 32 எம்.எம்., .9 எம்.எம்., .315 எம்.எம். துப்பாக்கிகளுக்காக குண்டுகள் இவை என்றனர்.
இந்த வன்முறைகளில் உள்ளூர் ரவுடிகள் பலரும் ஈடுபட்டிருப்பதும் அவர்கள் கள்ள துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்கின்றனர் டெல்லி போலீசார்.