விவசாயிகள் போராட்டம்... உற்சாகமாக பங்கேற்க வந்த 82 வயது பாட்டி கைது!
டெல்லி: டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த 82 வயதான பாட்டி பில்கிஸ் தாதி கைது செய்யப்பட்டார்.
இவர் டெல்லி ஷகீன்பாகில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பதற்றம் காரணமாக டெல்லியை ஒட்டியுள்ள மாநிலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்றைய விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த சமூக செயல்பாட்டாளர் 82 வயது மூதாட்டி பில்கிஸ் தாதி கைது செய்யப்பட்டார்.
அரியானா-டெல்லி மாநில எல்லைக்கு வந்த அவரை போலீசார் கைது செய்தனர். பல மாதங்களுக்கு முன்பு டெல்லி ஷகீன் பாகில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்தது. 82 வயது பாட்டி பில்கிஸ் தாதி இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அனைவரையும் வியக்க வைத்திருந்தார்.
இந்த நிலையில் இப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் களம் காண புறப்பட்டுள்ளார். இதுகுறித்து விவசாயிகள் போராட்டம் குறித்து பாட்டி பில்கிஸ் தாதி கூறுகையில், நாம் விவசாயிகளின் மகள்கள், அவர்களுக்கு ஆதரவாக இன்று போராட்டம் நடத்த உள்ளோம். நாம் நமது குரலை உயர்த்துவோம். அரசு நமது பேச்சை கேட்கவேண்டும் என்றார்.
ஆனால் போலீஸார் அவரைத் தடுத்து கைது செய்து அப்புறப்படுத்திக் கொண்டு போய் விட்டனர்.