7 நாடுகளில் வர்த்தக விசா… மோசடி மன்னன் நீரவ் மோடி குறித்து புதிய தகவல்
டெல்லி: இந்தியாவில் வங்கி மோசடி செய்து விட்டு, லண்டனுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி, சிங்கப்பூரிலிருந்து, சுவிட்சர்லாந்துக்கு 89 கோடி ரூபாயை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் பல்வேறு மோசடிகள் தற்போது அம்பலமாகியுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி) ரூ.13,500 கோடி மோசடி தொடர்பாக, வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, சிங்கப்பூரிலிருந்து, சுவிட்சர்லாந்துக்கு ரூபாய் 89 கோடியை நீரவ் மோடி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது தவிர, நீரவ் மோடி தனது கூட்டாளிகள் மூலம், ரூபாய் 66 கோடி மதிப்புள்ள வைரங்கள், ரூ.6.5 கோடி, 150 பெட்டி முத்து மற்றும் 50 கிலோ தங்கம் ஆகியவற்றை துபாய் மற்றும் ஹாங்காங்கில் உள்ள தனது நிறுவனங்களில் இருந்து லண்டனுக்கு கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்தியா இதற்கான ஆதாரங்களை வைத்துள்ளது.
வங்கி மோசடி செய்து விட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடிக்கு, ஏழு நாடுகளில் தொழில்முறை விசா இருப்பது கண்டறிந்துள்ளது. கனடாவின் வர்த்தக விசா (2019 வரை செல்லுபடியாகும்), அமெரிக்கா (2020 வரை செல்லுபடியாகும்), இங்கிலாந்து (2025 வரை செல்லுபடியாகும்) மற்றும் ஸ்ஹேன்ஜென் நாடுகளில் (2019 வரை செல்லுபடியாகும்) ஆகிய நாடுகளில் வர்த்தக விசா உள்ளதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஹாங்காங், துபாய் மற்றும் சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு மற்றும் குடியிருப்பு விசா வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது
சிறையில் உள்ள நீரவ் மோடிக்கு, இங்கிலாந்து நீதிமன்றம் இரண்டு முறை பிணை வழங்க மறுத்துள்ள நிலையில், இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து, ஏப்ரல் 26 ஆம் தேதி நடக்கும் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.