நாடு முழுவதும் புதிதாக 9,121 பேருக்கு கொரோனா... கேரளாவில் பாதிப்பு தொடர்ந்து உச்சம்!
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு மேலும் 81 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் 11,805 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 1,06,33,025 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நாடு முழுவதும் கோவோக்சின், கோவிஷில்டு என்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 87,20,822 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.
கொரோனாவின் வெறியாட்டம்
உலகம் முழுவதும் ஒரு ஆண்டை கடந்த பின்னரும் கொரோனா வெறியாட்டம் போட்டு வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இது போதாதென்று இங்கிலாந்தில் உருமாறிய தொற்று வேறு அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.
கேரளா மிக மோசம்
ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா அடங்க மறுக்கிறது. அதுவும் குறிப்பாக கேரளாவில் தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே கொரோனாவை முதன்முதலில் கட்டுப்படுத்தி அனைவரிடத்திலும் நல்ல பெயர் வாங்கிய கேரளா, தற்போது நாட்டிலேயே அதிகம் கொரோனா பாதிக்கும் மாநிலமாக உள்ளது.
9,121 பேருக்கு பாதிப்பு
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 9,121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த தொற்றுக்கு மேலும் 81 பேர் பலியாகி உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. மேலும் 11,805 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா மொத்த பாதிப்பு 1,09,25,710 ஆக உயர்ந்துள்ளது.
87,20,822 பேருக்கு தடுப்பூசி
கொரோனாவுக்கு இதுவரை 1,55,813 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 1,06,33,025 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் 1,36,872 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கோவோக்சின், கோவிஷில்டு என்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 87,20,822 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.