அப்பாவி மக்களை கொல்ல.. டெல்லியில் ஆயுதங்கள் வாங்க 9 தீவிரவாதிகளும் திட்டம்.. விசாரணையில் பகீர்
டெல்லி: மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளில் அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பாவி மக்களை கொன்று குவிக்க அவர்கள் ஆயுதங்கள் வாங்க டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தனர்.
மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் என்ஐஏ அமைப்பினர் தேடுதல் வேட்டையை நடத்தினர்.
அப்போது எர்ணாகுளத்திலிருந்து 3 பேரும் முர்ஷிதாபாத்தில் இருந்து 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 20 வயதுடையவர்கள். அனைவரும் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தவர்கள்.
கேரளாவில் கைது செய்யப்பட்டவர்கள் முர்ஷித் ஹாசன், இயாகுப் பிஸ்வாஸ், மொசாரஸ் ஹோசன் ஆகியோர் ஆவர். அது போல் மேற்கு வங்கத்திலிருந்து நஜ்முஸ் ஷாகீப், அபு சுஃபியான், மைனுள் மோன்டால், லியூ இயான் அகமது, அல் மாமுன் கமால், அடிடூர் ரெஹ்மான் ஆகியோர் ஆவர்.
இவர்களை கைது செய்ய மொத்தம் 11 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சமூகவலைதளங்கள் மூலம் பாகிஸ்தானின் அல்கொய்தா தீவிரவாதிகளால் இவர்கள் 9 பேரும் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். டெல்லி உள்ளிட்ட இடங்களில் நாச வேலைகளை செய்ய திட்டமிட்டிருந்தனர். இவர்கள் டெல்லியில் ஆயுதங்களையும் வெடி பொருள்களையும் வாங்க அவர்கள் அவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்பு... கேரளா மேற்குவங்கத்தில் 9 பேர் கைது!!
இவர்கள் 9 பேரும் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்படுவர் என தெரிகிறது.