பெண்களுக்கான இலவச பயண திட்டம்.. டெல்லி அரசின் முடிவுக்கு 90% பேர் ஆதரவு.! ஆம் ஆத்மி தகவல்
டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லி நகரில் அரசு போக்குவரத்து பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற டெல்லி அரசின் உத்தேச முடிவிற்கு, சுமார் 90 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஆம் ஆத்மி கூறியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக அபார வெற்றி பெற்றது. இதில் 5 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு மூன்றாவது இடமே கிடைத்தது.அடுத்த வருட துவக்கத்தில் டெல்லிக்கு சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அடுத்து வர உள்ள தேர்தலுக்குள் மக்களை எப்படியெல்லாம் கவரலாம் என ஆம் ஆத்மி தீவிரமாக யோசித்தது. அதன் விளைவாக சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி டெல்லியில் பெண்கள் மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார்.
இது பற்றி மேலும் தகவல் தெரிவித்த கெஜ்ரிவால், கட்டணம் அதிகமாக உள்ளது என்பதற்காக அரசு விரைவு பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய முடியாமல் தவிக்கும் பெண்களுக்காக, இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.
மெட்ரோ மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்களில் டிக்கெட் வாங்கி செல்லும் அளவுக்கு வசதி படைத்த பெண்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் உண்மையிலேயே தேவைப்படும் பெண்களுக்கு இந்த சலுகையை விட்டு கொடுக்க கெஜ்ரிவால் கேட்டு கொண்டார். இத்திட்டத்தால் டெல்லி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்படும். இது உத்தேச முடிவு என்றும் கூறப்பட்டது.
சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே ஆம் ஆத்மி அரசு இம்மாதிரியான கவர்ச்சி திட்டங்களை மக்களுக்கு அறிவிப்பதாக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி அரசின் இலவச பயண திட்டம் தொடர்பான உத்தேச திட்டம் குறித்து, குடிசை பகுதிகள், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மற்றும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்திற்கு சுமார் 90.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மாநில அமைச்சரான கோபால் ராய், டெல்லியில் 71,552 பேரிடம் ஆம் ஆத்மி அரசின் உத்தேச முடிவு குறித்து கருத்து கேட்கப்பட்டது.
இதற்கு சுமார் 64,972 பேர் அதாவது 90 சதவீதத்திற்கும் அதிகமானோர், அரசின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கை முதல்வர் கெஜ்ரிவாலிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.