ஜம்முவில் 5 ஆண்டுகளில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு
டெல்லி: கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து, இந்த 5 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் மொத்தம் 963 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்தது. அந்த பதிலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தீவிரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் உள்துறை அமைச்சகத்தின் தகவல் படி, மத்திய ஆயுத போலீஸ் படைகள் ஒவ்வொன்றும் நியமிக்கப்பட்ட நல அலுவலர் ஒருவரை ஒவ்வொரு தலைமையகத்திலும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இது பற்றி தகவல் தெரிவித்து பேசிய மத்திய பாதுகாப்பு துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், கடந்த 2018-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 318 தீவிரவாத தாக்குதல்கள் நிகழந்துள்ளதாக கூறினார். இந்த தாக்குதல் எண்ணிக்கையானது கடந்த 2017ம் ஆண்டு நடந்த தாக்குதல்களின் எண்ணிக்கையை விட 187 அதிகமாகும் என்றார்.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில், 400 தீவிரவாதிகள், காஷ்மீருக்குள் ஊடுருவியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், 126 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
மேலும் இந்த 5 ஆண்டுகளில் ஜம்முவில் மொத்தம் 413 ராணு வீரர்கள், தீவிரவாதிகளுடனான மோதலின் போது வீரமரணம் அடைந்து உயிர் தியாகம் செய்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் கோயலுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட எதிர் தாக்குதல்களில் கடந்த ஓராண்டில் 265 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில், தீவிரவாதிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளின் போது மொத்தம் 43 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது