ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்பது 99.9% காங். தொண்டர்கள் விருப்பம்: ரந்தீப் சுர்ஜிவாலா
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்பதுதான் 99.9% கட்சி தொண்டர்களின் விருப்பம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் 23 மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி இருந்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைமை உட்பட வியூகங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி அடுத்த 10 நாட்களுக்கு தொடர் ஆலோசனைகளை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பீகார் தேர்தல் தோல்வி, கேரளா உள்ளாட்சி தேர்தல் பின்னடைவு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் கட்சியின் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அக்கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது:
விவசாய சட்டங்களின் நன்மைகள் குறித்து டிச. 25-ல் விரிவாக விளக்கம் தருகிறேன்... பிரதமர் மோடி உறுதி
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கும். காங்கிரஸ் கட்சியில் அனைத்து தரப்பும் மிகவும் ஒற்றுமையுடனே உள்ளனர். நான் உட்பட 99.9% பேர் ராகுல் காந்தியையே தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என விரும்புகிறோம். இவ்வாறு சுர்ஜிவாலா கூறினார்.