பல கோடியில் கட்டிய சொகுசு பங்களா.. இடித்து தள்ளிய மஹாராஷ்டிர அரசு.. நீரவ் மோடி கலக்கம்!
மோசடி மன்னன் நீரவ் மோடிக்கு சொந்தமான பங்களா ஒன்றை அம்மாநில அரசு இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது.
டெல்லி: மோசடி மன்னன் நீரவ் மோடிக்கு சொந்தமான பங்களா ஒன்றை அம்மாநில அரசு இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவரின் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பெரிய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மும்பையில் உள்ள இவரின் பல கோடி சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டது.
இடித்து தள்ளினார்கள்
இந்த நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமான பங்களா ஒன்றை அம்மாநில அரசு இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்திற்கு அருகே இருக்கும் அலிகாக் பகுதியின் கடற்கரைக்கு அருகே கடலை பார்த்து இந்த பங்களா கட்டப்பட்டு இருந்தது. இது பல கோடி மதிப்புடைய சொகுசு பங்களா ஆகும்.
ஏன் இடித்தனர்
இவரின் பங்களாவை நேற்றுதான் இடித்தார்கள். இவர் பங்களா கட்டிய இடம் அரசுக்கு சொந்தமானது என்றும், அவர் முறையாக அனுமதி வாங்கி காட்டவில்லை என்றும் கூறியுள்ளனர். இதற்கும் இவர் நிதி மோசடி செய்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை, இது தனி வழக்கு என்று கூறி இருக்கிறார்கள்.
இன்னும் பலர்
இவருக்கு இது தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை என்றும் அம்மாநில அரசு கூறியுள்ளது. அதே பகுதியில் இப்படி முறைகேடாக வீடு கட்டி இருக்கும் பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 58 வீடுகளுக்கு இப்படி நேட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
மிக மோசம்
ஏற்கனவே மும்பையில் நீரவ் மோடி விவசாயிகளிடம் குறைந்த விலையில் வாங்கிய நிலங்களை மீண்டும் விவசாயிகள் கைப்பற்றினார்கள். நீரவ் மோடிக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை கைப்பற்றினார்கள். இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக நீரவ் மோடி பெரிய அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்.