பல காலமாக விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வெளியானது.. தடைகள் தகர்க்கப்படும்- நிர்மலா அதிரடி
டெல்லி: விவசாயிகள் மனம் குளிரும் வகையிலான ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
Recommended Video
பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு பேக்கேஜ் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து அந்த திட்டம் பற்றிய தகவல்களை நிர்மலா சீதாராமன் தினமும் மாலை 4 மணிக்கு நிருபர்களை சந்தித்து விளக்கி வருகிறார்.
நாடு முழுக்க 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.. நிதி அமைச்சர் நிர்மலா அறிவிப்பு!
புதிய சட்டம்
இன்று 3வது நாளாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, விவசாயிகளுக்கு மிகவும் தேவையான மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார். காய்கறிகளை மாநிலங்களுக்கு இடையே தங்கு தடையின்றி எடுத்துச் செல்வதற்கு வசதியாக மத்திய அரசு சட்டம் இயற்றும் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன் மூலம், விவசாயிகளுக்கு எந்த ஒரு மாநிலத்திலும் பொருட்களை எடுத்துச் சென்று தங்கு தடையின்றி விற்பனை செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
கட்டுப்பாடு கிடையாது
டெல்லியில் இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன் இது பற்றி கூறுகையில், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விவசாய பொருள் வியாபாரம் செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அது முற்றிலும் நீக்கப்படும். ஒவ்வொரு முறையும் ஒரு விவசாயி தனது விதைகளை விதைக்கச் செல்வதற்கு முன், உற்பத்தி, விலை மற்றும் அளவு ஆகியவற்றில் ஒரு உத்தரவாதம் பெற நாங்கள் விரும்புகிறோம்.
பிற மாநிலங்களிலும் விற்பனை
விவசாயிகள் தங்களுக்கு ஏற்ற விலையில், மாநிலங்களுக்கு இடையே, தடை இன்றி எங்கு விற்பனை செய்ய வேண்டுமோ அங்கு விற்பனை செய்யலாம். ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள ஏபிஎம்சி மார்க்கெட்டுகளை இதற்காக பயன்படுத்தலாம். மேலும், இணைய வழியிலும் வர்த்தகத்தில் விவசாயிகள் ஈடுபட முடியும். இதற்கு வசதி ஏற்படுத்தித் தரும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை நாட்டின் எந்த பகுதிக்கும் கொண்டு செல்லலாம். புதிய சட்டத்திருத்தம் மூலம் விளைபொருட்களை கொண்டு செல்வதில் எந்த தடையும் இருக்காது.
விலை கட்டுப்பாடு நீக்கம்
வெங்காயம், தக்காளி, பருப்புகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. மேற்கண்ட இந்த பொருட்களுக்கான இருப்புகளுக்கான அதிகபட்ச வரம்பு தளர்த்தப்படும். இதற்காக, 1955 ஆம் ஆண்டின் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் திருத்தப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இன்றைய தினம் முழுக்கவே, விவசாயம், மீன்வளர்ப்பு, பால் வளத்துறை உள்ளிட்டவை சார்ந்த அறிவிப்புகளே இடம் பெற்றிருந்தன.
விவசாயிகளுக்கு ஜாக்பாட்
இதில், இந்த அறிவிப்பு என்பது மிகுந்த முக்கியத்துவமானது. அனைத்து துறைகளிலும் இந்தியா தற்சார்பு அடைய வேண்டும் என்பதே கொரோனா காலத்திற்கு பிந்தைய இந்திய அரசின் நிலைப்பாடு. அதில் விவசாயிகள்தான் முதுகெலும்பானவர்கள். அவர்களை தவிர்த்துவிட்டு பிற விஷயங்களில் தன்னிறைவு பெற்று பலனில்லை. எனவேதான், விவசாயிகளுக்கு இந்த அசத்தல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு. விவசாய கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.