டெல்லி அனைத்து கட்சி கூட்டத்தில் சி.வி. சண்முகத்தை அனுமதிக்காததன் பின்னணியில் அதிமுக பிரமுகர்!
டெல்லி: கோஷ்டி சண்டைக்கு எந்த இடம் எந்த நேரம்னு எதுவும் இல்லை என்பதைத்தான் டெல்லியிலும் போய் மீண்டும் மீண்டும் அதிமுகவினர் நிரூபித்து வருகின்றனர். பிரதமர் மோடி கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமிழக அமைச்சர் சி.வி. சண்முகத்தை அனுமதிக்காததற்கு காரணமே அதிமுக பிரமுகர்தான் என்கின்றன டெல்லி தகவல்கள்.
மத்திய அமைச்சரவையில் தங்களது கோஷ்டிகளுக்குத்தான் இடம் வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியார் தரப்பு, துணை முதல்வர் ஓபிஎஸ் தரப்பு டெல்லியில் மல்லுக்கட்டியது. இதனால் அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் முதல்வர் எடப்பாடி தரப்பு மீது டெல்லி பாஜக கடும் வெறுப்பில் இருக்கிறது. தாங்கள் சேர்த்து வைத்த ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் தராமல் போனதில் தொடங்கி லோக்சபா தேர்தல் உள்ளடி வரையிலான விவரங்களை வைத்துக் கொண்டு தங்களை சந்திக்கும் தமிழக அமைச்சர்களை வறுத்தெடுக்கிறதாம் பாஜக மேலிடம்.
நாட்டில் எந்த முதல்வரும் இப்படி செய்ததில்லை.. 'ஸ்டார்' சர்ச்சையில் குமாரசாமி
மோடி தலைமையில் கூட்டம்
இந்நிலையில்தான் ஒரே தேசம், ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதிமுக பங்கேற்பு
அதிமுக சார்பில் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.பி. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்பர் எனக் கூறப்பட்டது. இதையடுத்து சி.வி.சண்முகம் டெல்லியில் முகாமிட்டிருந்தார்.
அனுமதி திடீரென மறுப்பு
ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு சென்ற சி.வி. சண்முகத்தை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. கட்சித் தலைவர்கள், டெல்லி பிரதிநிதிகளுக்குத்தான் அனுமதி என கூறி திருப்பி அனுப்பிவிட்டனர் அதிகாரிகள்.
அதிமுக உட்கட்சி மோதல்
அப்போதுதான், அதிமுகவின் பிரதிநிதியான தென்மாவட்ட சீனியர்தான் லாபி மூலம் தம்மை அவமதித்து திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார் என்கிற விவரம் சி.வி. சண்முகத்துக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து டெல்லியிலும் அதிமுகவின் அக்கப்போர் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது.