சிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை- குவியும் கண்டனங்கள்
டெல்லி: சிக்கிம் மாநிலத்தை நேபாளம், பூட்டானுடன் சேர்த்து தனிநாடு என்று டெல்லி அரசு விளம்பரம் ஒன்றில் இடம்பெறச் செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
டெல்லி மாநில அரசு பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதில் யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என பட்டியலிட்டிருந்தது.
இதில் சிக்கிம் தனிநாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வளவுதான் சிக்கிம் கொந்தளித்துவிட்டது. உடனடியாக டெல்லி அரசுக்கு சிக்கிம் மாநில தலைமை செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், நாங்கள் இந்தியாவின் குடிமகன் என்பதில் பெருமிதம் அடைகிறோம். உங்களது விளம்பரம் எங்களை காயப்படுத்திவிட்டது என சுட்டிக்காட்டியிருக்கிறார். சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங்கும் டெல்லி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
டெல்லி அரசின் இந்த பிழை கடுமையான கண்டனத்துக்குரியது. சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்தபகுதி. டெல்லி அரசு இந்த பிழையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றார். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இத்தகைய பிழைகள் சகித்துக் கொள்ள முடியாதவை என கூறியுள்ளார்.
தன் காதில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. வெளியே வந்து.. அருகில் இருந்த மனைவி மீது பாய்ந்த தோட்டா!
இந்நிலையில் இப்படி ஒரு விளம்பரம் வெளியிட்டதற்காக சிவில் டிபென்ஸ் இயக்குநரக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி ஆளுநர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பிரச்சனைக்கு டெல்லி மாநில அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது பாஜக.