ராம்தேவை ஓட ஓட விரட்டுறாங்க-அங்கிட்டு கைது செய்ய கோரிக்கை- இங்கிட்டு கிரிமினல் நடவடிக்கைக்கு வழக்கு
டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்த ராம்தேவ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு மருந்து கிடைக்காமல் மனித உயிர்களை லட்சக்கணக்கில் பலி கொடுத்து வருகின்றன. கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
சீனாவின் கொரோனா வைரஸுக்கும் ஐரோப்பிய நாடுகளின் கொரோனா வைரஸுக்குமான மரபணு வேறுபாடு இருக்கிறது; இது கொரோனா மருந்து கண்டுபிடிப்பில் மிகப் பெரும் முட்டுக்கடையாக இருக்கிறது என்கிறது மருத்துவ உலகம்.
இதுதான் ஒரே வழி.. அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை.. ஐசிஎம்ஆர் அதிரடி
ராம்தேவின் கொரோனா மருந்து
இந்த நிலையில் திடீரென கொரோனாவை 15 நாட்களில் 100% குணப்படுத்தும் மருந்தை நாங்களே முதலில் கண்டுபிடித்துவிட்டோம்; ரூ545 தான்.. 30 நாட்களுக்கு சாப்பிடலாம்.. கொரோனாவே இல்லாமல் போய்விடும் என்று யோகா வகுப்பு நடத்தும் ராம்தேவ் அறிவித்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
விளம்பரம் செய்ய மத்திய அரசு தடை
ராம்தேவுக்கு மத்திய அரசுதான் முதலில் செக் வைத்தது. ராம்தேவ், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி அவர் தமது தயாரிப்பை விளம்பரம் செய்ய தடை விதித்தது மத்திய அரசு. மேலும் கொரோனாவுக்கான மருந்து என ராம்தேவ் கூறுவது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
காய்ச்சல் மருந்துதான்
அத்துடன் உத்தரகாண்ட் மாநில அரசு இன்னும் ஒருபடி மேலே சென்று ராம்தேவை அம்பலப்படுத்தியது. ராம்தேவின் தயாரிப்பு கொரோனாவுக்கான மருந்து என நாங்கள் லைசென்ஸ் கொடுக்கவே இல்லை. அது சளி, காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துதான் என உண்மையை பகிரங்கமாக போட்டுடைத்தது.
பீகார் கோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில அரசும் ராம்தேவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி ராம்தேவ் ஏதேனும் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்பட்டிருக்கிறது. ராம்தேவின் இந்த அறிவிப்புக்கே அவரை கைது செய்திருக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் பீகாரில் ராம்தேவ் அண்ட் கோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு ஜூன் 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.