மக்களவை தேர்தல் ரிசல்ட் வெளியாவது லேட் ஆகும் சரி.. எவ்வளவு நேரம் ஆகும்? தேர்தல் ஆணையம் விளக்கம்
டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் போது வழக்கமாக ஆகும் நேரத்தை விட, இம்முறை சற்று கூடுதல் நேரமாகும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் வரும் மே 19-ம் தேதியுடன் முடிகிறது. பின்னர் மே 23-ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனினும் வழக்கமாக முடிவுகள் அறிவிக்க எடுத்து கொள்ளும் நேரத்தை விட இம்முறை கூடுதல் நேரம் ஆகும் என தெரிகிறது.
இதற்கு முந்தைய மக்களவை தேர்தல்களில் எல்லாம் எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவுகள் தெரிய ஆரம்பித்து விடும். ஆனால் இம்முறை தேர்தல் முடிவுகள் சரியாக வெளியாக 4 முதல் 5 மணி நேரம் தாமதமாகும் என கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்.. வேதாந்தாவின் நிகர லாபம் 46 சதவீதம் சரிவு
முதல் முறையாக மக்களவை தேர்தலில் விவிபாட்
நடப்பு மக்களவை தேர்தலில் முதன் முறையாக ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்த பின்பு அருகே உள்ள ஒப்புகைச் சீட்டு இயந்திரத்துக்குள் யாருக்கு வாக்களிக்கப்பட்டது என அச்சிடப்பட்ட சீட்டு 7 வினாடிகள் வரை தெரியும்.
தள்ளுபடியான எதிர்கட்சிகளின் கோரிக்கை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளில் 50% வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்ப்பது தொடர்பான மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. 21 எதிர்கட்சிகளின் கோரிக்கைபடி 50 சதவீத வாக்குகளை விவிபாட் இயந்திரத்துடன் சரிபார்த்தால், அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து தேர்தல் முடிவுகள் வெளியிட 6 நாட்கள் வரை தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் வாதிட்டது
இந்த வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது என கூறி எதிர்கட்சிகளின் சீராய்வு மனுவை நிராகரித்துவிட்டது.
தொகுதிக்கு 5 மெஷின்களில் ஒப்பீடு
முன்னதாக தொகுதி ஒன்றுக்கு ஒரு ஓப்புகைச்சீட்டு இயந்திரத்துடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை ஒப்பிட்டு பார்த்து, வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. ஆனால் எதிர்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் 5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவினால் ஒரு ஒப்புகை சீட்டு இயந்திரத்திற்கு பதிலாக 5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
முடிவுகள் வெளியாவதில் தாமதம்
5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க உள்ளதால், வழக்கமாக ஆகும் நேரத்தை விட சற்று கூடுதல் நேரம் ஆகும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியிடுவதற்கு 4 முதல் 5 மணி நேரம் தாமதமாகும் என எதிர்பார்ப்பதாக ஆணையம் கூறியுள்ளது.