நெகிழ்ச்சி, வெறுப்பு, அன்பு.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. இந்தியா வந்த அமெரிக்க அதிபர்கள்.. ரீவைண்ட்
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக, பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஒருபக்கம் கோலாகல, ஏற்பாடுகள் தயாராகும் நிலையில், அமெரிக்க அதிபர்கள் பலரின் முந்தைய இந்திய பயணங்கள் என்ன? அவற்றால் ஏற்பட்ட பலன்கள் அல்லது விமர்சனங்கள் என்ன? இதோ ஒரு ரீவைன்ட்:
இந்தியாவுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமை ட்வைட் டி ஐசனோவரை சாரும். 1959 ஆண்டு, டிசம்பரில் தேசிய தலைநகரான டெல்லியில் ட்வைட் டி ஐசனோவர் தரையிறங்கியபோது 21 துப்பாக்கி குண்டு முழக்கத்தோடு வரவேற்கப்பட்டார்.
திறந்த கார் மூலம் ரோடு ஷோ நடத்திக் காண்பிக்கப்பட்டது. அதிபர், ட்வைட் டி ஐசனோவர் மற்றும் அப்போதைய, இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோருக்கு இடையிலான நட்பு அமெரிக்க-இந்தியா உறவுகளில் ஒரு முதல் பாசிட்டிவ் சிக்னலாக பார்க்கப்பட்டது.
முதல் பயணம்
மொத்தத்தில், ட்வைட் டி ஐசனோவரின், நான்கு நாள் பயணம் வெற்றிகரமாக இருந்தது. மகாத்மா காந்தியின் நினைவுச்சின்னத்தில் பூக்களை வைத்து மரியாதை செலுத்தினார், தாஜ்மஹாலின் சிறப்பை பார்த்து நெகிழ்ந்தார், நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் உரையாற்றினார். சுமார் 10 லட்சம் பொதுமக்கள் அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். அவர் அமெரிக்கா திரும்பியபோது "எங்கள் இதயத்தின் ஒரு பகுதியை எடுத்துச் சென்றுவிட்டார்" என நேரு வர்ணித்தார்.
அதிருப்தியாளர்
ரிச்சர்ட் நிக்சன் 1969ம் ஆண்டு ஆகஸ்டில் ஒரு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். ஆனால் அவர்தான் இந்தியாவை வெறுக்கக்கூடிய ஒரு அமெரிக்க அதிபராகவும் இருந்தார். நிக்சன் பொதுவாக இந்தியர்களை விரும்பவில்லை, குறிப்பாக,பிரதமர் இந்திரா காந்தியை ரொம்பவே வெறுத்தார். அப்போது பனிப்போர் உச்சத்தில் இருந்தது. இந்தியாவின் அணிசேரா கொள்கை அமெரிக்க அதிபர்களை திகைக்க வைத்தது. இந்திரா காந்தி தலைமையின்கீழ், இந்தியாவின் நடுநிலைமை மாறி, சோவியத் யூனியன் சார்பு வெளியுறவுக் கொள்கையாக மாறியதை நிக்சன் விரும்பவில்லை.
இந்திரா காந்தி
நெருங்கிய அமெரிக்க நட்பு நாடான பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை துண்டாக பிரித்து தனி நாடாக மாற்றிய இந்திரா காந்தியின் அதிரடியால், நிக்சன் ரொம்பவே கடுப்பில் இருந்தார். 1971 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி வெள்ளை மாளிகைக்குச் சென்றபோது இந்த பிரச்சினை அப்பட்டமாக வெளிப்பட்டதாம். பின்னர் வெளியான சில வெளியுறவுத் துறை ரகசிய 'கேபிள்கள்' இதை உறுதி செய்தன. இந்திரா காந்தியை "வயது முதிர்ந்த சூனியக்காரி" என்று நிக்சன் குறிப்பிட்டதாக அந்த கேபிள்கள் தெரிவித்தன.
மொரார்ஜி தேசாய்
1978ஆம் ஆண்டில் ஜிம்மி கார்டர் இரண்டு நாள் இந்தியா விஜயம் செய்தார். சுமார் 500 நிருபர்களுடன், கார்ட்டர் வந்து டெல்லியில் இறங்கினார். அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தார், நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார், தாஜ்மஹால் சென்றார், டெல்லிக்கு வெளியே சுமா கெராகான் என்ற கிராமத்திற்கு சென்றார். ஏனெனில் அவருக்கு அந்த கிராமத்துடன், தனிப்பட்ட தொடர்பு இருந்தது. கார்டரின் தாயார் லிலியன், 1960 களின் பிற்பகுதியில் அமைதிப் படையின் உறுப்பினராக இந்தியாவில் இருந்தபோது இங்கு சென்றிருந்தார். எனவே ஜிம்மி கார்டரும் அவரது மனைவி ரோசலினும் இந்தியா வந்தபோது, அந்த கிராமத்திற்கு சென்றார்.
பில் கிளிண்டன்
20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அமெரிக்க அதிபர் இந்தியா வந்தார் என்றால் அது பில் கிளிண்டன்தான். அவர் வருகை முக்கியமானதும் கூட. 2000ம் ஆண்டு மார்ச் மாதம், பில் கிளிண்டன், வருகை தந்தார். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் சிறப்பான வரவேற்பு வழங்கினார். 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு பொக்ரானில் அணு குண்டு சோதனை நடத்தியதால் அமெரிக்கா கோபத்திலிருந்த காலகட்டம் அது. இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. அப்போது கிளிண்டன் விசிட் அடித்தது, இந்த இறுக்கத்தை தளர்த்தியது. கிளிண்டனின் ஐந்து நாள் பயணம் "ஒரு மகிழ்ச்சியான வருகை" என்று வர்ணிக்கப்படுகிறது. தொழில்நுட்ப மையமாக வளர்ந்து வந்த ஹைதராபாத், இந்தியாவின் நிதி தலைநகரான மும்பை நகரங்களுக்கும் கிளிண்டன் சென்றார். இந்தியாவின் பொருளாதார மற்றும் இணையதள ஆற்றலை அவர் நேரில் கண்டுணர்ந்தார்.
அணு ஒப்பந்தம்
ஜார்ஜ் டபுள்யூ புஷ், "இந்தியாவின் மிகச் சிறந்த அமெரிக்க அதிபர்" என்று வர்ணிக்கப்படுபவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 2006 மார்ச் மாதம் அவர் மூன்று நாட்கள் இந்திய சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டார். வர்த்தகம் மற்றும் அணுசக்தி தொழில்நுட்ப விஷயங்களில் இது முக்கியமான சுற்றுப் பயணம்.
பிரதமர் மன்மோகன் சிங்குடனான அவரது தனிப்பட்ட நட்பை இங்கு குறிப்பிடாமல் கடக்க முடியாது. அமெரிக்கா சென்ற பிறகு, மன்மோகன் சிங்கின் உருவப்படத்தை புஷ் வரைந்து அசத்தினார். அந்த அளவுக்கு மன்மோகன் என்றால் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு ரொம்ப பிடிக்கும்.
புஷ் பயணத்தின் போது வரலாற்று முக்கியத்துவமும், சர்ச்சையும் ஒருங்கே எழுந்த அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பல தசாப்தங்களாக அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்.பி.டி) கையெழுத்திட மறுத்த இந்தியா புஷ் பயணத்தின்போது கையெழுத்திட்டது. இந்தியாவின் அணு சக்தி விவகாரங்களை ஆய்வு செய்ய இந்த ஒப்பந்தம் அனுமதி வழங்கியது. ஆனால், மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்ப வசதிகளை அமெரிக்காவிலிருந்து இந்தியா பெற்றது.
ஒபாமா சிறப்பு
இரண்டு அரசு முறைப் பயணங்களை, இந்தியாவிற்கு மேற்கொண்ட ஒரே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மட்டுமே. முதலில், 2010 இல் பிரதமர் மன்மோகன் சிங்குடனும், பின்னர் 2015 இல் பிரதமர் நரேந்திர மோடியுடனும் சந்திப்பு நிகழ்த்தினார். தனது முதல் வருகையின் போது, ஒரு பெரிய வர்த்தகக் குழுவுடன் டெல்லிக்கு பதிலாக மும்பையில் வந்து இறங்கினார் ஒபாமா. இது பொருளாதார உறவுகளுக்காக மட்டுமல்ல, 2008 மும்பை தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவுடன், நாங்கள் இருக்கிறோம் என உலக நாடுகளுக்கும், தீவிரவாத குழுக்களுக்கும், அமெரிக்கா ஒரு மெசேஜை வழங்குவதற்காகவும்தான். தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த, தாஜ் ஹோட்டலில், ஒபாமா தனது மனைவியுடன் தங்கினார்.
ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் இணைய இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று ஒபாமா அதிரடியாக அறிவித்தார். அது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய கொள்கை மாற்றமாகும்.
ட்ரம்ப் வருகை
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் ஒபாமா 2015ஆம் ஆண்டு, இந்தியாவின் குடியரசு தின (republic day) கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை பேச்சுவார்த்தையின் முக்கிய விஷயங்களாக இருந்தன. இரு தலைவர்களும் தென் சீனக் கடலில் சீனாவின் அத்துமீறல்கள் குறித்து, அதிருப்தி தெரிவித்தனர். அமெரிக்காவும் இந்தியாவும் பல விஷயங்களில் முரண்பட்டுள்ளன. ஆனால் 2015 ஆம் ஆண்டில் ஒன்றாக முன்னேறுவோம்...என்ற கோஷத்துடன், மோடியும், ஒபாமாவும் கைகோர்த்ததை மறக்க முடியாது. அதிபர் டிரம்பின் வருகை இந்த உறவை மற்றொரு கட்டத்திற்கு உயர்த்தக்கூடும்.