காங்கிரஸ் தலைவர்கள், மக்களுடனான தொடர்பை இழந்து விட்டனர்: குலாம் நபி ஆசாத் பொளேர்
டெல்லி: காங்கிரஸ் தலைவர்கள் மக்கள் உடனான தொடர்பை இழந்து விட்டனர் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சனம் செய்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல், 11 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் போன்றவற்றில் காங்கிரஸ் படு மோசமாக தோற்றது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி தோல்வி முகத்தில் உள்ளதை ஒப்புக்கொண்டு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு தயாராக வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்து இருந்தார்.
கபில் சிபல் கருத்துக்கு மற்றொரு மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், கபில் சிபல் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமல், தோல்வியை மட்டும் குறை கூறுவது தவறு என்று தெரிவித்தார்.
அதேநேரம், சிறிய கட்சிகள் கூட பீகாரில் வெற்றி பெறும்போது காங்கிரஸ் ஏன் வெற்றி பெறவில்லை என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார். இப்போது குலாம் நபி ஆசாத் ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இதேபோன்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பீகார் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது வருத்தம் அளிக்கிறது. 5 ஸ்டார் கலாச்சாரம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவி செய்யாது. பல வேட்பாளர்களும் காங்கிரஸிலிருந்து போட்டியிட டிக்கெட் கிடைத்ததும் 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் செய்துவிட்டு அங்கிருந்தபடி தேர்தல் பணியாற்றுகிறார்கள். எளிய மக்களுடன் கலந்துரையாடுவது கிடையாது. காங்கிரஸ் தலைவர்கள் மக்களுடனான இணைப்பை தவற விட்டுவிட்டனர்.
ஒருங்கிணைந்த முயற்சியால் கொரோனாவிலிருந்து மீள்வோம்.. ஜி20 உச்சி மாநாட்டில் மோடி பேச்சு
தேர்தல் தோல்விகளுக்கு காங்கிரஸ் மேலிட தலைமையை நான் குறை சொல்லமாட்டேன். கொரோனா நோய் பரவல் காலகட்டத்தில், அவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தேர்தல் பணியாற்றி உள்ளனர். ஆனால், நிர்வாகிகள் மக்களுடன் இணைப்பு இல்லாமல் இருக்கிறார்கள். கட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும். நிர்வாகிகளுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், அப்போதுதான் நிலைமை சீரடையும்.
காங்கிரஸ் தலைவர்கள் கிளர்ச்சி செய்யவில்லை. கிளர்ச்சி என்பது தலைமையை மாற்ற வேண்டும் என்று கூறுவதுதான். ஆனால் இப்போது தலைவர்கள் விமர்சனம் மட்டும் தான் செய்து வருகிறார்கள். கட்சியை சீர்திருத்த வேண்டும் என்ற நல்ல எண்ணம்தான் இதன் பின்னணியில் இருக்கிறது. இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.