இப்போது இது தேவையா?.. கோபப்பட்ட ராகுல்.. புண்பட்ட சோனியா மனது.. அந்த கடிதத்தில் என்னதான் இருந்தது?
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது நடக்கும் மோதல்கள், கருத்து வேறுபாடுகள், காரிய கமிட்டி கூட்ட விவாதங்கள் அனைத்திற்கும் திரி கிள்ளி போட்டது நேற்று எழுதப்பட்ட ஒரு கடிதம்தான். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இடைக்கால தலைவர் சோனியா காந்தி என்று மொத்த நேரு குடும்பத்தையே இந்த கடிதம் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.. அப்படி அந்த கடிதத்தில் என்னதான் இருந்தது?
இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது தொடங்கி காங்கிரசில் அதிருப்தியில் இருக்கும் மூத்த தலைவர்கள் 23 பேர் குறித்து விவாதம் செய்யப்பட்டது. சோனியா, ராகுல் இருவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருக்க முடியாது என்று உறுதியாக கூறிவிட்டனர்.
இதனால் அடுத்த தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பழம்பெரும் காங்கிரஸ் கட்சி உள்ளது.அதுவும் நேரு குடும்பத்தை சேராத ஒருவரை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. சோனியா இன்னும் 6 மாதமே இடைக்கால தலைவராக இருப்பார் என்பதால், அதற்குள் அடுத்த தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.
காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா நீடிப்பார்.. இன்னும் 6 மாதத்தில் புதிய தலைவர்.. பரபரப்பு முடிவு!
இன்று என்ன நடந்தது
இன்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின் ஹைலைட் விஷயங்கள் என்றால் பின் வரும் விஷயங்களை குறிப்பிடலாம்.
சோனியா காந்தி தலைவர் பதவியை விட்டு விலகுவதாக குறிப்பிட்டது. அதன்பின் 6 மாதம் நீடிக்க ஒப்புக்கொண்டது.
ராகுல் காந்தி தலைவர் பதவிக்கு வர முடியாது என்று கூறியதாக வெளியாகும் செய்திகள்.
கட்சிக்கு எதிராக, தலைமைக்கு எதிராக பேசிய 23 தலைவர்களை ராகுல் விமர்சனம் செய்தது. காங்கிரஸ் மிக மோசமான சிக்கலில் இருக்கும் போது இந்த எதிர்ப்பு தேவையா என்று கேட்டது.
23 மூத்த தலைவர்களையும் பாஜக இயக்குகிறது என்று ராகுல் தெரிவித்தார் என்று வெளியான செய்திகள். அதை தொடர்ந்து கபில் சிபில் டிவிட், குலாம் நபி அசாத் ராஜினாமா திட்டம்.
''மூத்த தலைவர்களுக்கு பாஜக உடன் தொடர்பு'' என்று ராகுல் காந்தி கூறவில்லை, என்று சுரஜ்வாலா தெரிவித்த மறுப்பு.. இப்படி ஒரே நாளில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு அவெஞ்சர் படமே வெளியாகி முடிந்து இருக்கிறது.
என்ன காரணம்
காங்கிரஸ் கட்சிக்குள் இன்று நடந்த அனைத்து மோதல்களுக்கும் ஒரே ஒரு லெட்டர்தான் காரணம். பல மாதங்களாக வந்து கொண்டு இருந்த புகையில், 23 லிட்டர் பெட்ரோலை ஊற்றியது அந்த லெட்டர். நேற்று காலை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தூண்களாக கருதப்படும் 23 தலைவர்கள் கடிதம் எழுதினர். இந்த கடிதம்தான் தற்போது நடக்கும் மோதலுக்கு காரணம் ஆகும்.
கடிதத்தில் இருந்தது என்ன
இந்த கடிதத்தை காங்கிரசின் முன்னாள் மாநில முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், காரிய கமிட்டி உறுப்பினர்கள், சீனியர் உறுப்பினர்கள், சில மாநில காங்கிரஸ் தலைவர்கள் எழுதி உள்ளனர். இதில் அவர்கள் குறிப்பிட்டு இருக்கும் முதல் விஷயம்.. லோக்சபா தேர்தல் தோல்விக்கு இன்னும் காங்கிரஸ் முழுமையான பொறுப்பு ஏற்று, அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது. அடுத்தது.. காங்கிரசுக்கு சரியான ஆக்டிவ் தலைவர் இல்லை என்பது!
ஆக்டிவ் தலைவர்
தற்போது இருக்கும் தலைவர் களத்தில் இறங்கி வேலை பார்க்கவில்லை. காங்கிரசில் களத்தில் இறங்கி வேலை பார்க்கும் தலைவர் தேவை. தலைவர் மட்டும் மாற கூடாது. அனைத்து பொறுப்புகளுடன் தேர்தலை நடத்த வேண்டும். மாநில அளவில் காங்கிரஸ் கட்சிக்குள் சீர் திருத்தங்களை கொண்டு வர வேண்டும். இதனால் கட்சியை வழி நடத்தும் வகையில், பிரச்சனைகள் தீர்க்கும் வகையில் ஒரு தலைவரை உருவாக்க வேண்டும்., என்று இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கோபம் ஏன்
அதோடு இந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சி தனது கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். கொள்கை ரீதியாக, பாஜக போல வலிமையான, வெளிப்படையான விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் . காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீப நாட்களில் நிறைய தலைவர்கள் வெளியேறியதும். இளைஞர்கள் பலர் பாஜகவில் இணைந்ததும்தான் இந்த புரட்சி கடிதத்திற்கு காரணம் என்று கூறுகிறார்கள். இதில் எல்லாம் தேசிய தலைமை மௌனம் காத்துள்ளது.
ராகுல் காந்தி
எந்த விதமான முடிவையும் தேசிய தலைமை இதில் எடுக்காமல் இருந்துள்ளதுதான், 23 தலைவர்களின் கோபத்திற்கு காரணம் என்கிறார்கள். இந்த கடிதம்தான் ராகுல் காந்திக்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது. தலைவர் சரியாக செயல்படவில்லை என்று கூறியது, நேரு குடும்பத்து உறுப்பினர்களுக்கு சுயமரியாதை பிரச்சனையாக மாறியுள்ளது. கட்சியின் கூட்டு தோல்வியை மொத்தமாக ராகுல் - சோனியா மீது திருப்பவது இருவருக்கும் கோபத்தை உண்டாக்கி உள்ளது.
தேவையா?
இதை தொடர்ந்தே இன்று நடந்த மீட்டிங்கில் ராகுல் கோபமாக பேசி இருக்கிறார். இந்த நேரத்தில் இது தேவையா? ஏற்கனவே கட்சி மோசமான நிலையில் உள்ளது தெரியாதா? என்று கூட்டத்தில் ராகுல் கேட்டு இருக்கிறார். சோனியாவும் என் மனம் புண்பட்டுவிட்டது, ஆனால் இதை அனைத்தையும் மறந்துவிட்டு கடந்து செல்கிறேன் என்று வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்.
ஏன் இப்படி
இந்த கடிதம் இவ்வளவு பெரிய புயலை கிளப்பியதற்கு காரணம், இந்த கடிதத்தை எழுதியது இளைஞர்கள் அல்ல. 23 காங்கிரஸ் தூண்கள். சோனியா கண்ணை மூடிக்கொண்டு நம்பும் அவரின் நெருங்கிய ஆதரவாளர்களே இந்த கடிதத்தை எழுதி உள்ளனர். குலாம் நபி அசாத், கபில் சிபல் போன்றோர் இப்படி எழுதியது சோனியாவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.. அதன்பின்பே காங்கிரஸ் தலைமையில் இருந்து விலகி இருக்க நேரு குடும்பம் முடிவு செய்துள்ளது!