தமிழ் மாணவர்களால் டெல்லியில் கல்வி உரிமை பறிபோகிறதா?.. கேஜ்ரிவாலுக்கு ஒரு "பொளேர்" கடிதம்!
டெல்லி: தமிழ் மாணவர்களால்தான் டெல்லி மாணவர்களின் கல்வி உரிமையே பறிபோகிறது என ஓட்டு அரசியலுக்காக இனப் பிரிவினைவாதம் பேசுகிற அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களை அதிர வைக்கிறது.
டெல்லியில் அனைத்து இன மக்களும் வாழ்கின்றனர். ஆனால் கேஜ்ரிவால் தமிழர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து அவர்களால்தான் டெல்லி மாணவர்களின் கல்வி உரிமை பறிபோகிறது என உண்மைக்குப் புறம்பாக ஓட்டு அரசியலுக்காக பேசியிருந்தார்.
இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த தமிழ் பத்திரிகையாளர் ராஜேஸ்வரி கணேசன், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
அன்புள்ள அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு,
டெல்லி வாழ் தமிழர்களின் வாழ்த்துகள்.
முன்பின் தெரியாத ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. பொதுவாக இப்படியான தொலைபேசி அழைப்புகளை நான் எடுப்பதில்லை.
இருப்பினும் ஒரு பத்திரிகையாளர் என்கிற அடிப்படையில் எடுத்து கேட்டேன். அது எனக்கு பழக்கமான குரலாகத்தான் இருந்தது. உங்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட அழைப்பாக அது இருந்தது.
லோக்சபா தேர்தலுக்கான ஆம் ஆத்மி பிரசாரத்தின் ஒரு பகுதியாக நீங்கள் பேசியிருந்தீர்கள். உங்கள் பேச்சில், டெல்லி பல்கலைக் கழகங்களில் டெல்லி மாணவர்களின் வாய்ப்புகளை தமிழ் மாணவர்கள் தட்டி பறிக்கிறார்கள் என்பதை நியாயப்படுத்தும் வகையில் பேசியிருந்தீர்கள்.
எனக்கு வாக்களித்தால் டெல்லி பல்கலைக் கழகங்களில் டெல்லி மாணவர்களுக்கே வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வோம் என்றும் வாக்குறுதி அளித்திருந்தீர்கள். உங்கள் இனவாத பேச்சு என்று மட்டும் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு நாளைக்கு 10 முறை டெல்லி மக்கள் இந்த பேச்சை கேட்பதால் ஏற்படும் எதிர்விளைவுகளை எண்ணி அஞ்சினேன்.
சாலையோர டீக்கடையில்.. அமைச்சர்களுடன் டீ சாப்பிட்ட முதல்வர்
டெல்லியில் பிறந்து வளர்ந்த தமிழ் பிள்ளைகள் டெல்லிவாலாக்களின் இனவாதத்தால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை உணருங்கள். எங்களுக்கு எதிரான இனவாதங்கள் ஆசிரியர்களாலே கட்டமைக்கப்பட்டன. எங்களுக்கு எதிரான இனவாதங்கள் திட்டமிட்டு பெற்றோரால் கற்பிக்கப்பட்டன.
அப்படியான ஏழை, நடுத்தர வர்க்கத்தினரிடையேதான் உங்கள் பேச்சு சென்றடைந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் கறுப்பர்கள்; ஏதோ வேற்று நிலத்தில் இருந்து வந்தவர்கள் என்கிற மனோபாவம்தான் டெல்லிவாலாக்களிடம் வேர்பிடித்து நிற்கிறது.
ஆனால் உண்மைதான் என்ன? 2016-ம் ஆண்டு ஸ்ரீராம் காமெர்ஸ் கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் 80% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இது முழுமையாக மெரிட் அடிப்படையில்தான் சேர்க்கப்பட்டது என்கிறார் முதல்வர் பிசி ஜெயின். தமிழ்ப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அனைத்துப் பாடங்களையும் படிக்க் வைக்கக் கூடியவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உறவுகளுக்கு இறுதி சடங்குகளை செய்யும் வீட்டில் படிக்கும் தமிழ் மாணவன் கணிதத்தில் 98% மதிப்பெண்களைப் பெற்றும் இருக்கிறான் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
டெல்லி கல்லூரிகளில் டெல்லி மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு பெற்றுத்தருவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளீர்கள். ஆனால் இந்த இடஒதுக்கீட்டு வாக்குறுதியை டெல்லி பல்கலைக் கழகங்கள் உடனடியாக நிராகரித்துவிட்டன.
ஏனெனில் டெல்லி பல்கலைக் கழகங்கள் 1922-ம் ஆண்டு சட்டப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவை. அங்கே இடஒதுக்கீட்டை மாநில அரசு தீர்மானிக்கவும் முடியாது.
மேலும் முழுமையான ஒரு மாநில அரசாக இல்லாமல் யூனியன் பிரதேச அளவில் இதை செயல்படுத்தவும் முடியாது என்பதும் பிரதிபா ஜோலி போன்ற கல்வியாளர்கள் கருத்து. அப்படி ஒரு சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் எனில் நாடாளுமன்றம்தான் அதைச் செய்ய முடியும். தேர்தல் வாக்குறுதியாக அடித்துவிட முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.