இளம் பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை.. ராணுவ மேஜர் டிஸ்மிஸ்.. பென்சனும் ரத்து.. ராணுவ தளபதி அதிரடி
டெல்லி: பெண் கேப்டனுக்கு நள்ளிரவில் பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கிய ராணுவ அதிகாரியை பணியில் இருந்து நீக்கியதோடு அவரது பென்சனையும் ரத்து செய்து ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் மேஜர் கலோன். இவர் அசாம் ரைபிள் படைப்பிரிவில் மேஜராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2016ம் ஆண்டு ராணுவத்தின் மேற்கு பகுதியில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது தன்னுடன் பணிபுரிந்த இளம் பெண் கேப்டன் ஒருவருக்கு நள்ளிரவில் பாலியல் தொந்தரவு கொடுத்து தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக குறிப்பிட்ட பெண் கேப்டன் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதில் மேஜர் கலோன் குற்றம் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மேஜர் கலோனை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் இன்று உத்தரவிட்டுள்ளார். இதனிடையே டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராணுவ அதிகாரி காலோனுக்குக்கு ஓய்வூதியமும் ரத்து செய்யப்படுவதாக ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ராணுவ அதிகாரி ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதுடன், பென்சனும் ரத்து செய்யப்பட்டு இருப்பது ராணுவத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.