சட்டீஸ்கர்.. கோதாவரி பவர் ஆலையில் பெரும் தீ விபத்து.. கொழுந்து விட்ட ஜுவாலைகள்
டெல்லி: சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரிலுள்ள கோதாவரி பவர் இஸ்பாட் ஆலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தின் காட்சிகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கும் தெரியுமளவுக்கு ஜுவாலைகள் பெரிதாக இருந்தன. இதையறிந்த மக்கள் பலர் ஓடிச் சென்று செல்போன்களில் வீடியோவாக அதை பதிவு செய்தனர். அப்போது டமார் என்ற சத்தத்தோடு, ஆலையில் ஏதோ வெடிக்கும் சத்தம் வெளியானது. இதனால் மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து காவல்துறை, மற்றும் தீயணைப்பு துறையின் உயர் அதிகாரிகள் சென்று பரிசீலனை நடத்தினர். தீயணைக்கும் பணிகளை முடுக்கி விட்டனர்.
இதுவரை, இந்த விபத்தால் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை. இந்த மாத தொடக்கத்தில்தான் கோதாவரி பவஸ் மற்றும் இஸ்பாட் சட்டீஸ்கர் மாநில அரசுடன், ராய்ப்பூர் மற்றும் பஸ்டர் மண்டலத்தில் ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. இது முறையே ரூ.14000 கோடி மற்றும் ரூ.900 கோடி மதிப்பிலானது ஆகும். இந்த நிலையில்தான், இந்த தீ விபத்து நடந்துள்ளது.