டெல்லி விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம்.. பயணியாக வந்தவர்.. பைலட்டாக மாறினார்!
Recommended Video
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் இருந்த நிலையில், அதில் பயணியாக வந்த பைலட் ஒருவர் திடீரென விமானத்தை இயக்கினார். பனிமூட்டம் அதிகமாக இருக்கும் போது சிஏடி-3பி பயிற்சி பெற்ற பைலட்டுகள் இருந்தால் மட்டும் இயக்க அனுமதிக்கப்படும் என்பதால் அவர் அத்தகைய பயிற்சி பைலட் என்பதால், அவரே அமர்ந்து விமானத்தை இயக்கினார்.
பொதுவாக பனிமூட்டம் அதிகமாக இருக்கும் போது வானத்திலிருந்து தரைப்பகுதியை பார்க்க முடியாது.. அப்படிப்பட்ட சூழலில் சிஏடி-3பி பயிற்சி பெற்ற பைலட்டுகள் பணியில் அமர்த்தப்படுவது வழக்கம்.அதாவது டிசம்பர் பிற்பகுதியில் பனி மூட்டம் அதிகமாக இருக்கும் போது இத்தகைய பைலட்டுகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். '
பார்க்கும் திறன்
ஆனால் நேற்று முன்தினம் காலையில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் திடீரென பனிமூட்டம் கடுமையாக இருந்தது. அத்துடன் வானத்தில் இருந்து தரைப்பகுதியை பார்க்கும் திறன் குறைவாகவே இருந்தது.
விமானி இல்லை
இந்த சூழலில் புனேவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் (6இ-6541) புறப்பட தயாரானது. அந்த விமானத்தின் பைலட் சிஏடி-3பி பயிற்சி பெறாதவர் ஆவார். அந்த நேரத்தில் விமானத்தில் சிஏடி-3பி பயிற்சி பெற்ற பைலட்டை மாற்றுவது சிரமம் என்கிற நிலை இருந்தது. மேலும் பயணிகளுக்கு காலதாமதம் ஏற்படும் நிலை இருந்தது.
அனுபவ விமானி
அந்த நேரத்தில் விமானத்தில் சிஏடி-3பி பயிற்சி பெற்ற பைலட் பயணியாக அமர்ந்து இருந்தார்.இதை அறிந்த விமான நிர்வாகம் அவரை விமானத்தை இயக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. அவரும் சரிஎன்றார்.
சோதனைகள் முடிந்தது
இதையடுத்து விமான போக்குவரத்துறை அதிகாரிகளிடம் விமான நிர்வாகம் அனுமதி கோரியது. இதையடுத்து பைலட்டுகளுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் மது சோதனைகள் முடிந்த பின்னர் விமான அறைக்குள் அவர் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் விமானம் புனேவில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றது.
பயணிகள் ஆச்சர்யம்
இதன் காரணமாக காலை 7.30 மணிக்கு புறப்பட்ட வேண்டிய விமானம் ஒரு மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக 9.10க்கு புறப்பட்டு சென்றது. சீருடையில் இல்லாத பைலட் திடீரென விமானத்தை இயக்கியதை கண்டு பயணிகள் ஆச்சர்யம் அடைந்தனர். இது மிகவும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.