'ஓடிசாவின் மோடி' பிரதாப் சந்திர சாரங்கிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த பிரதமர் மோடி!
Recommended Video
டெல்லி: ஒடிசாவை சேர்ந்த பாஜகவின் ஒரே எம்பியும் ஏழை எம்பியுமான பிரதாப் சந்திர சாரங்கிக்கு மோடி அமைச்சரவையில் இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியா மற்றும் அண்டை நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் பங்கேற்றனர்.
மொத்தம் 8000 விருந்தினர்கள் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
குடிசை வீடு, சைக்கிள் மட்டுமே சொத்து.. ஆட்டோவில் பிரசாரம்.. ஒடிஸாவில் ஏழ்மை நிலையில் வாழும் "மோடி"
57 அமைச்சர்கள்
பிரதமர் மோடியை தொடர்ந்து 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
அமித்ஷா, ஜெய்சங்கர்
மோடியின் அமைச்சரவையில் பல புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கர் ஆகியோருக்கு கேபினட் அமைச்சர்களாக பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரதாப் சந்திர சாரங்கி
அவர்களுடன் எந்த ஆரவாரமும் இன்றி சைலன்ட்டாக அமைச்சர் பதவி ஏற்றுள்ளார் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாஜகவின் ஒரே எம்பி பிரதாப் சந்திர சாரங்கி. ஒடிசாவின் மோடி என்று அழைக்கப்படும் இந்த எளிய மனிதருக்கு இணையமைச்சராக பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளார் பிரதமர் மோடி.
ஏழை எம்பி
மண் சுவர்.. குடிசை.. சைக்கிள்.. ஒரு பை இதுதான் பிரதாப் சாரங்கிக்கு சொந்தமானவை. மிகவும் ஏழை எம்பியான பிரதாப் சந்திர சாரங்கி திருமணம் செய்து கொள்ளத ஒரு பிரம்மாச்சாரி. தனகக்கென குடும்பம் குழந்தைகள் என எதுவும் இல்லை.
ஆட்டோவில் பிரச்சாரம்
அதைவிடை சிறப்பு இவர் ஒடிசா மாநிலத்தில் போட்டியிட்ட பாஜகவின் ஒரே எம்பி. தேர்தலின் போது கூட தனது வசதிக்கு ஏற்றார்போல் ஆட்டோவில் சென்று பிரச்சாரம் செய்து மக்களின் கவனத்தை பெற்றார்.
சைக்கிள் பயணம்
எங்கு சென்றாலும் தனக்கு சொந்தமான சைக்கிளில் செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் பிரதாப் சந்திர சாரங்கி. லோக்சபா தேர்தலில் தன்னை எதிர்த்து களம் இறக்கப்பட்ட கோடீஸ்வர வேட்பாளர்களை தனது எளிமையால் வீழ்த்தி எம்பியானார்.
பிரதமர் மோடி பிரச்சாரம்
சாரங்கிக்கு எதிராக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கே பிரச்சாரம் செய்தார் ஆனால் அவரை வீழ்த்த முடியவில்லை. பாலசோர் தொகுதியில் போட்டியிட்ட சாரங்கிக்கு ஆதரவாக பிரதமர் மோடி அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அழகு பார்த்த பாஜக
பணக்கார வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட சாரங்கி பாலசோர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். அவரது எளிமையையும் திறமையும் கண்டு வியந்த பாஜக அவருக்கு முதல் முறையிலேயே அமைச்சர் பதவி வழங்கி அழகுபார்த்துள்ளது.